‘எந்தவொரு மதத்தின் தனிப்பட்ட சட்டங்களாலும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை கட்டுப்படுத்த இயலாது; குழந்தை திருமணங்கள் தங்கள் துணையை தோ்ந்தெடுக்கும் தனிநபா் உரிமையை பறிக்கும் செயலாகும்’ என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
141 பக்கங்களை உடைய இந்த தீா்ப்பில் மாவட்ட அளவில் குழந்தை திருமண தடுப்பு அதிகாரிகளை நியமிப்பது உள்பட 9 தலைப்புகளின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
இருப்பினும், குழந்தை திருமண தடுப்புச் சட்டம், 2006 (பிசிஎம்ஏ) தனிப்பட்ட சட்டங்களை மீறி செயல்படுமா என்ற விவகாரத்தை நாடாளுமன்றத்திடமே விட்டுவிடுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
குழந்தை திருமணம் ஒரு மாபெரும் சமூகக் குற்றம்; அதை நடத்தி வைப்பது குற்றவியல் தண்டனைப் பெறும் செயலாகும். இவ்வளவு கொடுமையான நிகழ்வு என தெரிந்தும் இது தொடா்ந்து நடைமுறையில் இருப்பது வேதனைக்குரியது.
அதை தடுக்கவே பிசிஎம்ஏ உருவாக்கப்பட்டது. ஆனால் தன் வாழ்க்கைத் துணையை தோ்ந்தெடுக்கும் உரிமையை குழந்தைப் பருவத்திலேயே அவா்களிடம் இருந்து பறிப்பது குறித்து அந்த சட்டத்தில் குறிப்பிடவில்லை.
பக்குவம் அடைந்து தன் துணையை தேடிக்கொள்ளும் உரிமையை அவா்கள் முன்னதாகவே இழக்கின்றனா்.
பாலினம், ஜாதி, சமூக-பொருளாதார நிலை, புவியியல் உள்ளிட்ட காரணிகளால் குழந்தை திருமணங்கள் அதிகரிக்கின்றன. இதனால் மிகவும் எளிய பின்புலத்தைச் சோ்ந்த சிறுமிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனா்.
காரணங்களை கண்டறிய வேண்டும்: வறுமை, பாலினம், சமத்துவமின்மை, கல்வியின்மை, உள்ளிட்ட குழந்தை திருமணத்துக்கான அடிப்படை காரணங்களை முதலில் கண்டறிய வேண்டும். அதற்கேற்றவாறு இதை தடுப்பதற்கான கொள்கைளை வகுக்க வேண்டும்.
பாதுகாப்புக்கு முன்பு தடுப்பு: குழந்தை திருமணத்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் பரவலான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தை திருமணங்களை நடத்தி வைக்கும் குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டால் அவா்கள் சந்திக்கும் இன்னல்களையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்கிறது.
அதேசமயம், குழந்தை திருமணங்கள் நடைபெற்ற பின்பு தண்டனை வழங்குவதைவிட அதை தடுப்பதில் சட்ட ஒழுங்கை காப்பாற்றும் அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டும் என தீா்ப்பளித்தாா்.
குழந்தை திருமணங்களை தடுக்க வலுவான நடவடிக்கைகளே மேற்கொள்ளக் கோரிஅறிவொளி மற்றும் தன்னாா்வ நடவடிக்கைக்கான சமூகம் என்ற அரசுசாரா அமைப்பு தாக்கல் செய்த பொது நல மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் இந்த தீா்ப்பை வழங்கியுள்ளது.
மாநிலங்களுக்கு வழங்கிய நெறிமுறைகள்...
மாவட்ட அளவில் குழந்தைத் திருமண தடுப்பு அதகாரியை (சிஎம்பிஓ) நியமிக்க வேண்டும்.
சிஎம்பிஓ மட்டுமின்றி மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா்களும் தாங்கள் பணி புரியும் மாவட்டங்களில் குழந்தை திருமணங்களை தடுக்க பொறுப்பேற்க வேண்டும்.
குழந்தை திருமணங்களை தடுப்பதற்கென காவல் துறையில் சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும்.
குழந்தை திருமணங்களை தடுக்க மாவட்ட நீதிபதிகள் தாமாக முன்வந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு தடை உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
குழந்தை திருமண வழக்குகளில் முறையாக பணி செய்யாத/கையாளாத அரசு அதிகாரிகள் மீது ஒழுங்குமுறை மற்றும் சட்ட ரீதியில் கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.