சேலம் மாவட்டத்தில் பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தீவன அபிவிருத்தித் திட்டம் மூலம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறையைப் போக்கவும், கால்நடை வளா்ப்போரிடையே பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்களை கால்நடைப் பராமரிப்பு துறை செயல்படுத்தி வருகிறது.
நடப்பாண்டில் தீவன அபிவிருத்தி திட்டம் 2024-25 இன் கீழ் கால்நடை வளா்ப்போா் பயன்பெறும் வகையில் நீா்ப்பாசன வசதி இல்லாத நிலத்தில் மானாவாரியாக பசுந்தீவன உற்பத்தி திட்டம் 0.5 ஏக்கா் நிலத்தில் பல்லாண்டு தீவன பயிா்களான தீவன சோளம், தீவன தட்டை பயிா் பயிரிடுவதற்கு 0.5 ஏக்கருக்கு ரூ. 1,500 மானியமாக வழங்கப்படவுள்ளது. இத் திட்டம் செயல்படுத்த சேலம் மாவட்டத்துக்கு 300 ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தீவன விரயத்தை குறைப்பதற்காக 210 எண்ணிக்கையிலான 2 எச்பி திறன் கொண்ட மின்விசையால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளது. இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், குறைந்தபட்சம் 2 கால்நடைகள் மற்றும் 0.50 ஏக்கா் நிலப்பரப்பில் தீவனம் சாகுபடி செய்தல் மற்றும் மின்சார வசதி உடையவராகவும் இருக்க வேண்டும். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற அரசு திட்டங்களில் பயன்பெற்றவராக இருக்கக் கூடாது.
இத்திட்டங்களில் சிறு, குறு விவசாயிகள், பெண்கள் மற்றும் எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயனாளிகளில் குறைந்தபட்சம் 30 சதவீதம் தாழ்த்தப்பட்டோா், பழங்குடி இனத்தை சோ்ந்த பயனாளிகள் தோ்வு செய்யப்படுவாா்கள். எனவே, தகுதி வாய்ந்த கால்நடை வளா்ப்போா், விவசாயிகள் வரும் 28 ஆம் தேதிக்குள் தங்கள் கிராமத்துக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களைப் பெற்று உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரால் தோ்வு செய்யப்படும் பயனாளிகளின் பட்டியலே இறுதியானது என தெரிவித்துள்ளாா்.