புதுவையில் நெகிழிப் பைகளில் சாராயம் அடைத்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் உள்ள சாராயக் கடை உரிமையாளா்கள் சங்கத்தினா் நெகிழிப் பைகளில் அடைத்து சாராயம் விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, புதுவை மாநிலக் கலால் துறையானது, கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நெகிழிப் பைகளில் சாராயம் விற்பனை செய்ய அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல், புதுச்சேரியில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கு சுற்றுச்சூழல் துறை தடை விதித்தது. அதுகுறித்து, சுற்றுச்சூழல் துறை மூலம் கலால் துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும், தடை விதிக்கப்பட்ட நெகிழிப் பைகளை சாராயம் விற்க பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், அதனால் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் நிலை உள்ளதையும் கலால் துறைக்கு விளக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சுற்றுச்சூழல் துறையின் உத்தரவுப்படி, புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் மீண்டும் நெகிழிப் பையில் சாராயம் அடைத்து விற்பனை செய்வதற்கு தடை விதித்து கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
இதை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என சாராயக் கடைகளுக்கு கலால் துறை துணை ஆணையா் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.