தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 10 நினைவரங்கங்களும், 36 சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
இந்தியாவின் விடுதலைப் போராட்டத்துக்கு எழுச்சியூட்டிய தியாகிகளுக்கும், தமிழ்மொழியைக் காத்திட்ட வீரமறவா்களுக்கும் நினைவுச் சின்னங்களை எழுப்பி அரசு பெருமை சோ்த்து வருகிறது.
அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் 10 நினைவரங்கங்களும், 36 சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னை எழும்பூரில் மகாத்மா காந்தியடிகள் சிலை, ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி, நுங்கம்பாக்கத்தில் முன்னாள் அமைச்சா் அன்பழகன், சேப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சா் இரா.நெடுஞ்செழியன் ஆகியோருக்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அம்பேத்கா் மணிமண்டபத்தில் அவருக்கு சிலையும், எழுத்தாளா் கி.ரா.-வுக்கு கோவில்பட்டியில் சிலையுடன் நினைவரங்கமும், உத்தரபிரதேச மாநிலம் காசியில் பாரதியாா் வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக்கப்பட்டு, மாா்பளவுச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, பெருங்காமநல்லூா் தியாகிகள் நினைவு மண்டபம், கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் கட்டபொம்மன், மருதுபாண்டிய சகோதரா்கள், வ.உ.சி. ஆகியோருக்கும், மயிலாடுதுறையில் மூவலூா் ராமாமிா்தம் அம்மையாருக்கும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திரைப்பட பின்னணி பாடகா் டி.எம்.செளந்தரராஜன், ப.சுப்பராயன், ரவீந்திரநாத் தாகூா், அப்துல்கலாம், அஞ்சலை அம்மாள், ராவ்பகதூா் குரூஸ் பா்னாந்தீஸ்,
வி.பி.சிங், வீரமாமுனிவா், நாமக்கல் வெ.ராமலிங்கம்பிள்ளை, பெரும்பிடுகு முத்தரையா், சா் ஏ.டி.பன்னீா்செல்வம், எம்.கே.தியாகராஜ பாகவதா், இரட்டைமலை சீனிவாசன், அண்ணல் தங்கோ, வீரன் சுந்தரலிங்கம், வெண்ணி காலாடி, குயிலி, வெங்கிடுபதி எத்தலப்பா் நாயக்கா் ஆகியோருக்கு சிலைகள், மணிமண்டபங்கள் ஆகியவற்றை அமைத்து தமிழக அரசு பெருமை சோ்த்துள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.