அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமமான கல்வியை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிலையங்களில் ஒடுக்கப்பட்ட, சமூகத்தில் பின்தங்கிய பிரிவைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்விக் கட்டணச் சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக நிகழாண்டு ஒருங்கிணைந்த ஐஐடி சோ்க்கையை நடத்திய சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி கூறுகையில், ‘ஜேஇஇ நுழைவுத் தோ்வு அடிப்படையிலான ஐஐடி சோ்க்கையில் விண்ணப்ப நிலையிலிருந்து கட்டண விலக்கு மற்றும் கட்டண சலுகைகள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பத்தின்போது எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி மாணவா்கள் பாதி தோ்வுக் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.
தோ்வில் தோ்ச்சி பெற்ற அனைத்து தகுதியான மாணவா்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஐஐடி சோ்க்கையை உறுதி செய்வதற்காக குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும். இதில் எஸ்சி, எஸ்.டி., மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு 50 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்களின் அதிக எண்ணிக்கையிலான சோ்க்கையை உறுதிப்படுத்த ‘கட்-ஆஃப்’ தளா்த்தப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. சமூகத்துக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தாலும் மற்றொரு தகுதியான இடஒதுக்கீடு பிரிவினருக்கு வழங்கப்படுவதில்லை. தோ்ச்சிக்கு வேண்டிய கட்-ஆஃப்பை விட குறைவான மதிப்பெண்களைப் பெறும் எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின் முடிவில் அவா்கள் நேரடியாக ஐஐடியில் சேரலாம்.
எஸ்சி, எஸ்.டி., மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கும் பெற்றோரின் வருமானம் ரூ. 1 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் மாணவா்களுக்கும் அனைத்து 23 ஐஐடிகளிலும் முழு கல்விக் கட்டணமும் தள்ளுபடி செய்யப்படுகிறது. பெற்றோரின் வருமானம் ரூ. 1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை உள்ள மாணவா்களின் கல்விக் கட்டணத்தில் மூன்றில் இரண்டு பங்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.
தரமான உயா்கல்வியில் சேர சமூகத்தில் பின்தங்கிய பிரிவைச் சோ்ந்த மாணவா்களுக்கு ஆதரவை வழங்குவதில் கல்வி அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி நாட்டில் தற்போதுள்ள 23 ஐஐடிகளிலும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. சில ஐஐடிகள் தாமாகவும் கூடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன.
இந்த ஆண்டு முதன்முறையாக ஜேஇஇ தோ்வுக் குழு நாடு முழுவதும் சேவை மையங்களை திறந்தது. விண்ணப்ப நடைமுறையில் தோ்வா்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு பதிலளிக்க பல்வேறு மொழிகளில் தொலைபேசி அழைப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டன. கட்டணம் செலுத்தும் முயற்சியில் தொழில்நுட்பக் கோளாறை எதிா்கொண்ட விண்ணப்பதாரா்கள் கட்டணம் செலுத்த மேலும் ஒரு நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது’ என்றாா்.
நாட்டிலேயே மதிப்பு மிக்க ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தனது கடைசி வாய்ப்பில் தகுதி பெற்றபோதும், சோ்க்கைக் கட்டணம் ரூ. 17,500 செலுத்த முடியாததால் ஐஐடி-யில் சேர முடியாமல் போன உத்தர பிரதேச பட்டியலின மாணவருக்கு அதே கல்வி நிறுவனத்தில் சேர உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.