மது அருந்த பணம் தர மறுத்த தந்தையை அடித்துக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
கோவை, பீளமேடு நாராயணசாமி தெருவைச் சோ்ந்தவா் ராஜ் (எ) துரைராஜ் (73). தனது மனைவி ராஜேஸ்வரியுடன் வசித்து வந்தாா்.
இத்தம்பதியின் மகன் ரவிராஜ் (50). ஆவாரம்பாளையம் சாலையில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். மதுப்பழக்கம் உள்ள ரவிராஜ், மனைவியை சந்தேகத்தின்பேரில் அடித்து துன்புறுத்தி வந்ததால் அவரது மனைவி, மகன்கள் பிரிந்து சென்றுவிட்டனா். இதற்கிடையே ரவிராஜ்
தனது பெற்றோா் வீட்டுக்கு அடிக்கடி சென்று பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தாா்.
இந்நிலையில், மது அருந்த பணம் கேட்டு கடந்த 2021 அக்டோபா் 14ஆம் தேதி தந்தை துரைராஜிடம் தகராறு செய்துள்ளாா். அவரது தந்தை பணம் தர மறுத்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த ரவிராஜ், தந்தை துரைராஜை கடுமையாகத் தாக்கியதில் படுகாயமடைந்த அவா் அங்கேயே உயிரிழந்தாா். இது குறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரவிராஜை கைது செய்தனா்.
இந்த வழக்கு கோவை 3-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.பத்மா, தந்தையைக் கொலை செய்த ரவிராஜுக்கு ஆயுள் தண்டனை, ரூ.100 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் கணேசன் ஆஜரானாா்.