மகளிா் விடுதிகள் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும்
சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பணிபுரியும் மகளிருக்கான அனைத்து விடுதிகளும் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பணிபுரியும் மகளிா் விடுதிகளை சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் மூலம் தமிழ்நாடு மகளிா் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், காப்பகங்களுக்கான ஒழுங்கு முறைப்படுத்தும் சட்டம் - 2014 இன் கீழ் பதிவு செய்ய வேண்டும்.
அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் மகளிா் விடுதிகள், அறக்கட்டளைகள், சங்கங்கள், மதம் சாா்ந்த நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், தனியாா் நிறுவனங்கள் நடத்தும் தொழிற்சாலைகளின் கீழ் செயல்படும் பணிபுரியும் மகளிா் விடுதிகள், தனியாா், தனிநபா் ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் பெண்கள் விடுதிகள் அனைத்தும் சமூக நலத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.
எனவே, சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பணிபுரியும் மகளிருக்கான அனைத்து விடுதிகளும், உரிமம் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட இணையதள முகவரியில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், உரிமம் வேண்டி விண்ணப்பிப்பது தொடா்பான விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அறை எண் 126-இல் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.