PMK: ``தீபாவளிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது தனியார்மயமே'' - அன்புமணி
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31-ம் தேதி வரவிருக்கிறது. லட்சக் கணக்கான மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பவுள்ளனர். இதற்கான அரசு போக்குவரத்து முன்பதிவுகள் இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கி நிரம்பிவிட்ட நிலையில், இப்போது டிக்கெட்கள் கிடைக்காத நிலையில் பயணிகள் தவிக்கின்றனர்.
அமைச்சர் சிவசங்கர் பேட்டி..
தனியார் பேருந்துகளிலும் கொள்ளை விலையில் டிக்கெட் விலைகள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டிருந்தது. அதிலும் அரசு பேருந்துகளின் பற்றக் குறைக் காரணமாக அரசே தனியார் பேருந்துகளை எடுத்து அரசின் விலையில் இயக்கத் திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் சிவசங்கர் கூறியிருந்தார். இதுகுறித்து பேட்டியளித்திருந்த அவர், "தீபாவளியை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 5.80 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதற்காக போதுமான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படும். இது தவிர, தனியார் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தி இயக்க உள்ளோம்.
வெளிப்படையான ஒப்பந்தம் அடிப்படையில் அவர்களுக்கு இயக்க கட்டணம் ரூ.51.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு பேருந்துகளில் என்ன கட்டணம் தருவார்களோ, அதே கட்டணத்தை தரலாம். ‘அரசு ஏற்பாடு செய்தது’ என அந்த பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படும்” என்று கூறியிருந்தார்.
அரசின் இந்தத் திட்டம் தனியார்மயத்திற்கு வழிவகுக்கும் என்று விமர்சித்திருக்கும் 'பாமக' தலைவர் அன்புமணி ராமதாஸ், “தீபாவளிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது தனியார்மயமே. இதுபோன்ற பொதுமக்கள் மற்றும் தொழிலாளர் விரோத செயல்களில் அரசே ஈடுபடக்கூடாது" என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.
தனியார்மயத்திற்கு வழிவகுக்கும் - அன்புமணி ராமதாஸ்
இது குறித்து அன்புமணி ராமதாஸ் கூறுகையில், "தீப ஒளி திருநாளுக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் மக்களின் வசதிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக தனியார் பேருந்துகளுக்கு கி.மீக்கு ரூ.51.25 வீதம் வாடகை வழங்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியிருக்கிறார். இது மிகவும் ஆபத்தான முயற்சி. தனியார் மயத்துக்கு வழிவகுக்கும் இந்தத் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.
விடுமுறைகள் மற்றும் திருவிழாக் காலங்களில் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் தேவைக்காக சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்காக தனியார் பேருந்துகளை பயன்படுத்தப்போவதாக தமிழக அரசு கடந்த மாதமே அறிவித்திருந்தது. அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதியே இறுதி செய்யப்படுவதாக இருந்த நிலையில், அதற்கு முன்பாகவே இந்தத் திட்டத்திற்கு நான் எதிர்ப்பு தெரிவித்திருந்தேன். ஆனால், தொழிலாளர்கள் மற்றும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் ஆயுத பூஜை விடுமுறையின் போது தனியார் பேருந்துகளை குறைந்த எண்ணிக்கையில் வாடகைக்கு எடுத்து இயக்கிய அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், இப்போது தீபாவளிக்காக அதிக எண்ணிக்கையில் தனியார் பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. தீபாவளிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது தனியார் மயமே. இதுபோன்ற பொதுமக்கள் மற்றும் தொழிலாளர் விரோத செயல்களில் அரசே ஈடுபடக்கூடாது.
இதே முறையில் திணிக்கப்படும்...
மக்கள் வசதிக்காக என்ற போர்வைக்குள் மறைந்து கொண்டு தனியார் பேருந்துகளை அரசின் சார்பில் இயக்குவதை அனுமதிக்க முடியாது. நெரிசல் காலங்களில் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க சிறப்புப்பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். ஆனால், அதற்குத் தேவையான பேருந்துகள் அரசிடம் இல்லை என்பதால், தனியார் பேருந்துகள் வாடகைக்கு எடுத்து இயக்கப்படும்.
அந்த பேருந்துகளை தனியார் நிறுவனத்தின் ஓட்டுநரே இயக்குவார். அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துநர் மட்டும் அதில் பணியாற்றுவார். தனியார் பேருந்துகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில், ஆண்டுக்கு சில நாள்கள் மட்டுமே இயக்கப்படும் என்றும், இதை தனியார்மயம் என்று கூற முடியாது என்றும் அரசுத்தரப்பில் கூறப்படுகிறது.
அரசுத் தரப்பில் கூறப்படும் இந்த காரணங்களும், விளக்கங்களும் அப்பட்டமான பொய் ஆகும். மொத்த செலவு ஒப்பந்த முறையில் (Gross Cost Contract) தான் இந்தப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. முதலில் கூடுதலாக இயக்கப்படும் பேருந்துகளில் மட்டும் இந்த முறை செயல்படுத்தப்படும். அடுத்தக்கட்டமாக ஏற்கெனவே ஓடிக் கொண்டிருக்கும் பழைய பேருந்துகளை மாற்ற வேண்டிய தேவை ஏற்படும் போது, புதிய பேருந்துகளை வாங்காமல் தனியார் பேருந்துகள் இதே முறையில் திணிக்கப்படும்.
அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் போதிய பேருந்துகள் இல்லை என்பதால் தான் தனியார் பேருந்துகளை இயக்க ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது என்று தமிழக அரசின் சார்பில் கூறப்படும் காரணத்தை ஏற்க முடியாது. தனியார் பேருந்துகளை போக்குவரத்துக் கழகங்களில் திணிக்க வேண்டும் என்பதற்காகத் தான் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 8182 புதிய பேருந்துகளை வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அரசு நினைத்திருந்தால் அந்த பேருந்துகளை எப்போதோ வாங்கியிருக்கலாம். ஆனால், மூன்றரை ஆண்டுகளில் 1088 புதிய பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டன. மீதமுள்ள பேருந்துகளை குறித்த காலத்தில் வாங்க முடியாத அளவுக்கு தமிழக அரசை தடுத்தது யார்?
தனியார்மயத்திற்கான முன்னேற்பாடுகள்
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு காலாவதியான பேருந்துகளின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கு அளவுக்குக் கூட புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை. அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்பாமல் மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஒப்பந்தப் பணியாளர்களை மட்டும் அரசு நியமித்திருக்கிறது.
இவை அனைத்தும் தனியார்மயமாக்கத்திற்கான முன்னேற்பாடுகள் தான். மிகக்குறைந்த எண்ணிக்கையில் புதிய பேருந்துகளை வாங்குவதையும், சில நூறு பணியாளர்களை மட்டும் நியமிப்பதையும் சுட்டிக்காட்டி அரசுப் போக்குவரத்துக் கழங்கள் தனியார்மயமாக்கப்படாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறுவதை எவரும் நம்ப மாட்டார்கள்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு உண்மையாகவே இருந்தால், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கணிசமான அளவில் நிதியை ஒதுக்கி தேவையான அளவுக்கு புதிய பேருந்துகளை வாங்குவதுடன், புதிய பணியாளர்களையும் நியமிக்க வேண்டும்.
பயணிகள் சேவையையும், நிர்வாகத்தையும் மேம்படுத்துவதன் மூலம் அரசுப் போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து பண்டிகை காலங்களில் சிறப்புப் பேருந்துகளாக இயக்க தனியார் பேருந்துகளை ஒப்பந்தம் செய்யும் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர் விரோத செயல்களில் அரசு ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
ஆம்பூர் மூதாட்டி பெயரில் ரூ.2.39 கோடிக்கு GST மோசடி; கேரளாவில் பரிவர்த்தனை - நடந்தது என்ன?!
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கிருஷ்ணாபுரம், காமராஜர் 3-வது தெருவில் வசிக்கிறார் மூதாட்டி ராணி பாபு. அதே பகுதியிலுள்ள தோல் தொழிற்சாலை ஒன்றில் தூய்மைப் பணியாளராக வேலைச் செய்து வரும் ராணி பாபு பெயரில்... மேலும் பார்க்க
`எல்.முருகனின் விஷமத்தைவிட அவர் கருத்து ஆபத்தானது’ - ஆதரவு தெரிவித்த சீமானை விசிக தாக்கும் பின்னணி?
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஒருபக்கம் விமர்சிக்க, மறு பக்கம் முருகனுக்கு எதிராக கடும் எதிர்வினையாற்றினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பா... மேலும் பார்க்க
அட்டைப்படம்
அட்டைப்படம் - விகடன் ப்ளஸ் மேலும் பார்க்க
கார்ட்டூன்
கார்ட்டூன் மேலும் பார்க்க
``மத சட்டங்களால், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தை மீற முடியாது..'' - உச்ச நீதிமன்றம்
குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டத்தை எந்தவொரு தனிப்பட்ட சட்டமும் மீற முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்திருக்கிறது.இந்தியாவைப் பொறுத்தவரையில் சட்டப்படி பெண்களின் திருமண வயது 18, ஆண்களின... மேலும் பார்க்க
`திருவண்ணாமலை கோயிலுக்காக மாஸ்டர் பிளான் திட்டங்கள்’ - தீபத்திருவிழா ஆய்வில் உதயநிதி உத்தரவாதம்
திருவண்ணாமலை மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை வருகைத் தந்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அவருக்கு வழிநெடுகிலும் தி.மு.க-வினர் வரவேற்பு அளித்தனர்.இதையடுத்து, ... மேலும் பார்க்க