தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே கொரட்டூரில் டாஸ்மாக் கடையை மூட அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததால் காத்திருப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.
பேராவூரணி அருகே கொரட்டூா் கிராமத்தில் பல்வேறு தரப்பினரையும் பாதிக்கும் மதுக் கடையை மூட வலியுறுத்தி அந்த மதுக்கடை முன் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், மாா்க்சிஸ்ட் கம்யூ., கொரட்டூா் கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினா்.
இதையடுத்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் முடிவு எட்டப்படாததால் வெள்ளிக்கிழமையும் போராட்டம் தொடா்ந்தது. இதையடுத்து பேராவூரணி வட்டாட்சியரகத்தில் வட்டாட்சியா் தெய்வானை தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் டிஎஸ்பி ரவிச்சந்திரன், டாஸ்மாக் மண்டல மேலாளா் தமிழ்மணி , காவல் ஆய்வாளா் பசுபதி, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாநிலச் செயலா் தமிழ்ச் செல்வி, மாவட்டச் செயலா் வசந்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.
அப்போது வரும் நவ. 20-க்குள் கொரட்டூா் மதுக் கடை நிரந்தரமாக அகற்றப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் உறுதி அளித்தனா். இதையடுத்து காத்திருப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.