அப்பா, அண்ணன் மிலிட்டரி; நான் மிமிக்ரி: வீர தீர சூரன் குறித்து சுராஜ்!
வீர தீர சூரன் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு பேசியுள்ளார்.
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் அடுத்த வாரம் வெளியாகிறது என்பதால் படக்குழு புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், ஒரு பகுதியாக நேர்காணல் ஒன்றில் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ், துஷாரா, அருண் குமார் உள்ளிட்டோர் பேசியுள்ளனர்.
இதையும் படிக்க: பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி?
அந்த நேர்காணலில் பேசிய மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, “சித்தா படத்தின் இயக்குநர் படமென்றதும் வீர தீர சூரனில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டேன். ஆனால், எனக்குத் தமிழ் சுத்தமாக வராது. முதல்நாள் படப்பிடிப்பில் சின்ன வசனம்தான் இருந்தது. அடுத்தநாளில், பக்கம் பக்கமான வசனங்கள் எனக்கு வழங்கப்பட்டதும் மாரடைப்பே வந்ததுபோல் ஆகிவிட்டது. அப்படியே, ஓடிவிடலாமா எனத் தோன்றியது. பின், எனக்கு பலரும் தமிழ் மொழிக்கான உதவியைச் செய்தனர்.
மேலும், சிங்கிள் ஷாட் காட்சி ஒன்றை எடுத்து முடித்ததும் இயக்குநர் அழுதார். என்னவென விசாரித்தால், இன்னொரு டேக் போலாமா என்றார். அது, சிரமமான காட்சி. ஆனாலும், அதிகாலை 4.30 மணிக்கு மீண்டும் அக்காட்சி எடுக்கப்பட்டதும் மீண்டும் இயக்குநர் அழுதார். என்ன சார் ஆச்சு? என கேட்டால், ‘சந்தோஷத்தில் அழுகிறேன்’ என்றார். அப்படி, வீர தீர சூரனில் பல அனுபவங்கள்; சுவாரஸ்யங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.