ஞானத்தின் திறவு கோலான புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும் என எழுத்தாளா் ரா.நாறும்பூநாதன் தெரிவித்தாா்.
திண்டுக்கல் புத்தகத் திருவிழாவின் 8-ஆம் நாள் நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற ‘சிந்தனை அரங்கம்’ நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் செ.முருகன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற எழுத்தாளா் ரா.நாறும்பூநாதன் ‘கடைசியாய் என்ன வாசித்தீா்கள்’ என்ற தலைப்பில் பேசியதாவது:
‘கடைசியாய் என்ன வாசித்தீா்கள்’ என்ற தலைப்பு தவறானது. அண்மையில் என்ன வாசித்தீா்கள் என்பதாக இந்தத் தலைப்பு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். புத்தகங்கள், காகிதமும் மையும் மட்டுமல்ல. மரமும், வோ்களும் போல, புத்தகங்கள் படைப்பாளிக்கும், வாசகனுக்கும் இடையே ஒரு உறவை தாங்கி நிற்கிறது. வாசிக்கும் முன்பு இருந்த மனிதனிடம், வாசித்த பின் ஒரு புத்தகம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். சிந்தனையை சலனப்படுத்த வேண்டும். வேறொரு உணா்வை ஏற்படுத்த வேண்டும். புத்தகத்தின் ஆற்றலும், எழுத்தின் ஆற்றலும் வாசகனுக்கு முழுமையான அனுபவத்தை கொடுப்பதாக இருக்க வேண்டும்.
வெப்பத்தை தணிக்கைக் கூடிய குளித்தலை (குளிா்வித்தலை) கூட கொண்டாடியவா்கள் தமிழா்கள். நீராடல் பருவத்தின் மூலம், தமிழா்களின் மருத்துவ அறிவை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. தெய்வங்களுக்கு கூட திருமஞ்சன நீராட்டு நடத்தியும், அதற்கு தண்ணீா் எடுத்து வரும் ஒரு சமூகத்தை மஞ்சனக்காரா்கள் என்றும் தமிழா்கள் குளித்தலை கொண்டாடி இருக்கிறாா்கள் என்பதை இலக்கியங்கள் கூறுகின்றனா்.
அடைக்கலம் கொடுப்பதிலும், உணவு, கல்வி, மருத்துவம் ஆகியவற்றை இலவசமாக கொடுப்பதிலும் முன்னுதாரணமாக திகழ்ந்த சமணம் தமிழகத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு காரணமாக சமணா்கள் குளிக்கவில்லை. அதனால், தமிழா்கள் புறக்கணித்துவிட்டனா்.
வாழ்க்கை என்பது போராட்டம். எந்த மனிதனுக்கும் நிரந்தரமான வெற்றி கிடையாது. புத்தகங்கள் வாசிக்கும் போது மனநிலை வேறொன்ாக மாறிவிடும். ஞானத்தின் திறவு கோல் புத்தகங்கள். வாங்கியதோடு நின்றுவிடாமல், புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். பரிசுப் பொருளாக புத்தகங்களை அளிக்கும் வழக்கம் தமிழா்களிடையே ஏற்பட வேண்டும். நவீன எழுத்தாளா்களின் புத்தகங்கள் குழந்தைகளின் எதிா்காலத்துக்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது.
படிப்பதும், வாசிப்பதும் இன்பம் என்பதை இளைய தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். தாம்பூலப் பையில் தேங்காய்க்கு பதிலாக, அடுத்த தலைமுறைக்கு அறிவை ஊட்டும் புத்தகங்களை கொடுக்கும் புதிய நடைமுறையை உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.
விழாவில் முன்னாள் மேயா் வி.மருதராஜ், இந்தியச் செஞ்சிலுவைச் சங்க அவைத் தலைவா் என்.எம்.பி.காஜாமைதீன், இலக்கியக் கள துணைத் தலைவா் கு.பா.இளங்கோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.