Gaza-வின் பரிதாப நிலை - தாக்குதலை நிறுத்த மறுக்கும் Israel | Benjamin Netanyahu
புதுச்சேரி: "தவறு செய்யும் சுற்றுலாப் பயணிகளை விட்டுவிடலாமா?" – முதல்வர் கருத்தும், அமைச்சர் பதிலும்
சுற்றுலா மாநிலமான புதுச்சேரிக்குத் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வெள்ளிக்கிழமை மாலை வரும் அவர்கள், புதுச்சேரியைச் சுற்றிப் பார்த்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கள் ஊருக்குத் திரும்பிச் செல்கின்றனர். அப்படி வரும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களைக் குறிவைக்கும் காவல்துறை, போக்குவரத்து விதிமீறல் என்று கூறி அபராதம் விதிப்பதாகத் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
அதேபோல, `போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களிடம் அபராதம் வசூலித்தால் பரவாயில்லை. ஆனால் வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங்களைப் பார்த்தாலே அபராதம் விதிக்கிறார்கள்.
மேலும், அனைத்து ஆவணங்கள் சரியாக இருந்தாலும், அபராத ரசீது கொடுக்காமல் பணத்தை வசூலிக்கிறார்கள். அதனால் சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருவதற்குத் தயங்குகிறார்கள்’ என்றும் பரவலாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு, கருவடிக்குப்பம் சிவாஜி சிலை அருகே சுற்றுலாப் பயணிகளை நிறுத்தி காவல்துறையினர் அபராதம் விதித்துக் கொண்டிருந்தனர்.
ரங்கசாமி எச்சரிக்கை
அப்போது அந்த வழியே சென்ற முதலமைச்சர் ரங்கசாமி காவல்துறையினரை அழைத்து, "புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து அபராதம் விதித்தால், அது சுற்றுலாவை அதிகமாகப் பாதிக்கும். வெளி மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்தி அபராதம் விதிக்கக் கூடாது” என்று எச்சரித்துவிட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் செய்தியாளர்கள் நேற்று (அக்டோபர் 24) கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், "போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்குத்தான் அபராதம் விதிக்கப்படுகிறதே தவிர, அனைவருக்கும் விதிக்கப்படுவதில்லை. தனிப்பட்ட முறையில் அப்படி யாராவது செய்வது குறித்துப் புகாரளித்தால், எந்த போலீஸாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேவையில்லாமல் பொதுமக்களைத் தொல்லை செய்யக் கூடாது என்று காவல்துறைக்கு ஏற்கெனவே அறிவுறுத்தியிருக்கிறோம்.
சோதனை செய்யக் கூடாதா?
வெளியூரிலிருந்து வருபவர்கள் போக்குவரத்து விதிகளை மீறும்போதும், பொது இடத்தில் அநாகரிக செயல்களில் ஈடுபடும்போதும் அவற்றைக் கண்டிக்கும் பணியைத்தான் காவல்துறை செய்து கொண்டிருக்கிறது. அப்படிச் செய்பவர்களைக் கண்டிக்காமல் விட்டுவிடலாமா? தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநில வாகனங்களை காவல்துறை எதையும் செய்யக் கூடாதா? வெளி மாநில வாகனங்கள் வரும்போது, அதில் யார் வருகிறார்கள், குற்றப் பின்னணி உள்ளவர்கள் வருகிறார்களா என்று சோதனை செய்யக் கூடாதா?
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஒருபுறம் சொல்கிறோம். மற்றொருபுறம் வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களைச் சோதனை செய்யக் கூடாது என்றும் சொல்கிறோம். அது எப்படிச் சரியாக இருக்கும்? சுற்றுலா வருவாய் குறைவதாக முதல்வர் ஒருசிலவற்றை பொதுவாகச் சொல்லியிருக்கலாம். அனைத்து வாகனங்களையும் சோதனை செய்வதில்லை.
காவல்துறைக்கு டார்கெட்
சந்தேகப்படும்படியான வாகனங்களை மட்டுமே காவல்துறையினர் சோதனை செய்கிறார்கள்” என்றவரிடம், `ஒரு நாளைக்கு இத்தனை வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு டார்கெட் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்களே?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், "அது முற்றிலும் தவறான தகவல். அப்படி எந்த டார்கெட்டும் கொடுக்கப்படவில்லை” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb