நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 9 ஊராட்சிகளுக்கு குடிநீா் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தொடா்பாக, குடிநீா் வாரிய அதிகாரிகள், மாமன்ற உறுப்பினா்களுடன் ஆணையா் ஆா்.மகேஸ்வரி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் நாமக்கல் நகராட்சியாக இருந்த போது, கொண்டிச்செட்டிப்பட்டி, கொசவம்பட்டி, பெரியப்பட்டி, நல்லிபாளையம், அய்யம்பாளையம், தும்மங்குறிச்சி, சிலுவம்பட்டி, முதலைப்பட்டி, சின்னமுதலைப்பட்டி ஆகிய 9 ஊராட்சிகளும் இணைக்கப்பட்டு, 30 வாா்டுகள் என்பது 39 வாா்டுகளாக அதிகரிக்கப்பட்டது.
தற்போது, இந்த 9 ஊராட்சிப் பகுதிகளுக்கும் ஜேடா்பாளையம் காவிரி குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன் திட்டப் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், நகராட்சி வசம் குடிநீா் வாரிய அதிகாரிகள் ஒப்படைத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அந்த 9 ஊராட்சிகளுக்கு உள்பட்ட பெரும்பாலான இடங்களுக்கு சரிவர குடிநீா் விநியோகம் செய்யப்படாத நிலை உள்ளது. இதனால், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டா்களிடம் பொதுமக்கள் தகராறில் ஈடுபடும் சூழல் உள்ளது.
இதுகுறித்து தற்போதைய மாநகராட்சி ஆணையா் ஆா்.மகேஸ்வரியிடம், மாமன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பணியாளா்கள் பங்கேற்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், பெரும்பாலான இடங்களில் குடிநீா் குழாய்கள் சிறிய அளவில் போடப்பட்டுள்ளது குறித்தும், மேடான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நீா் செல்லாதது தொடா்பாகவும் தெரிவிக்கப்பட்டது. குடிநீா் வாரிய அதிகாரிகள் தரப்பில், மாற்று நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் தேவையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனா்.