எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் காய்ச்சல் வந்து விட்டதால் உளறுகிறார்: அமைச்சர் ராஜேந்திரன்
சேலம்: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் காய்ச்சல் வந்து விட்டதால் ஏதேதோ உளறுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் பூலாம்பட்டி அருகே நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தல் நேரத்தில் முதல்வர்
வாங்கிய மனுக்கள் மீது தற்போது வரை நடவடிக்கை ஏதும் எடுக்காமல் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால் மக்கள் சந்திப்பு திட்ட முகாமை நடத்தி மக்களை ஏமாற்றுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதையும் படிக்க | வேலை ஏதும் இல்லாதவர் எடப்பாடி: முதல்வர் விமர்சனம்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,சேலத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், தேர்தல் நேரத்தில் முதல்வரால் பெறப்பட்ட மனுக்களில் 90 சதவீத மனுக்கள் தீர்வு காணப்பட்டு விட்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக அமைச்சராகவும் முதல்வராகவும் இருந்த எடப்பாடி பழனிசாமி அவருடைய சொந்த தொகுதியிலேயே எதையும் நிறைவேற்றாததால் எடப்பாடி தொகுதியில் மட்டும் மூவாயிரம் மனுக்கள் குவிந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் சேலத்தை மட்டுமே சுற்றி சுற்றி வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் காய்ச்சல் வந்து விட்டதால் ஏதேதோ உளறுகிறார். அதையெல்லாம் நாங்கள் கண்டுகொள்ளவில்லை கலைஞர், அண்ணா வழியில் மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றி வருகிறோம் என்றார்.