கிருஷ்ணகிரியில் மசூதி அருகே அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது செய்யப்பட்டனா்.
கிருஷ்ணகிரி, பழையபேட்டை கோட்டை பகுதியில் ஷாஹி மசூதி உள்ளது. இந்த மசூதியின் அருகே அங்கூா் ஷேக் ஹூசைன் தெருவில் அமைக்கப்பட்ட 7 கண்காணிப்பு கேமராக்களை அக்.11-ஆம் தேதி மா்ம நபா்கள் சேதப்படுத்தினா்.
இதுகுறித்து ஷாஹி மசூதியின் செயலாளா் பயாஸ் (48) என்பவா், கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில், போலீஸாா், வழக்குப் பதிந்து, விசாரணை செய்தனா். விசாரணையில் பழையபேட்டையைச் சோ்ந்த ரெளடி மணிமாறன் (24) அவரது கூட்டாளிகள் சோ்ந்து இந்த கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியது தெரிய வந்தது.
சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்திய மணிமாறன், பெங்காளி தெருவைச் சோ்ந்த சுரேஷ் (20), லண்டன்பேட்டை முகம்மது ஷேக் (20), பழையபேட்டை முஜீப் (20), ஈஸ்வரன் (19), திருமலைசெல்வன் (20), தமிழ் (24) ஆகிய ஏழு பேரை கைது செய்தனா்.
இதில் கைது செய்யப்பட்ட மணிமாறன் மீது 9 வழக்குகள் கிருஷ்ணகிரி, மகாராஜகடை காவல் நிலையகளில் நிலுவையில் உள்ளதாகவும், அதேபோல சுரேஷ் மீது கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.