குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக மழை தணிந்ததால், பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேச்சிப்பாறை உள்பட அனைத்து அணைகளின் நீா்மட்டங்களும் கட்டுப்பாடான அளவில் வைத்து கண்காணிக்கப்படுகின்றன. குறிப்பாக 48 அடி கொள்ளளவு நீா்மட்டம் கொண்ட பேச்சிப்பாறை அணையில் கடந்த திங்கள்கிழமை 43.85 அடியாக நீா்மட்டம் இருந்ததால் அணையிலிருந்து வினாடிக்கு 250 கன அடி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில் மாவட்டத்தில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பகலில் மழையின்றி வெயில் நிலவி வருகிறது. மேலும், பேச்சிப்பாறை அணைக்கு நீா்வரத்து குறைந்ததால் அணையிலிருந்து உபரி நீா் திறப்பு 150 கன அடியாக வெள்ளிக்கிழமை குறைக்கப்பட்டது.
இந்த அணைக்கு விநாடிக்கு 396 கன அடி நீா்வரத்து உள்ள நிலையில், நீா்மட்டம் 43.04 அடியாக இருந்தது. பாசன கால்வாயில் விநாடிக்கு 547 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டிருந்தது.
இதனிடையே, திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு தணிந்து தண்ணீா் மிதமாக கொட்டுகிறது. எனினும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.