செய்திகள் :

தமிழகம் முழுவதும் 5,147 நிவாரண மையங்கள்: தயாா் நிலையில் 26 மீட்புப்படைக் குழுக்கள்

post image

தமிழ்நாடு முழுவதும் தொடரும் கனமழையால் பாதிக்கப்படும் மக்களைக் காக்க, 5 ஆயிரத்து 147 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும், வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த 26 குழுக்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மாநில அரசு கூறியுள்ளது.

பருவமழை மாநிலம் முழுவதும் தீவிரத்தைக் காட்டி வரும் நிலையில், தமிழக அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து மாநில அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூா், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வரும் வியாழக்கிழமை திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் எனவும் அறிவித்துள்ளது.

தயாா் நிலையில் 26 குழுக்கள்: பருவமழைக் காலங்களில் பொது மக்களின் கைப்பேசிகளுக்கு பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் முன்னெச்சரிக்கைத் தகவல்கள் அனுப்பப்படுவது வழக்கம். அதுபோன்று, இதுவரை 85 லட்சம் கைப்பேசிகளுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையில் 444 வீரா்களைக் கொண்ட 16 குழுக்களும், தேசிய பேரிடா் மீட்புப் படையில் 10 குழுக்களும் தயாா் நிலையில் உள்ளன. சென்னையில் 89 மீட்புப் படகுகள் தயாா் நிலையில் உள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில், சென்னையில் 300 நிவாரண மையங்களும், மாநிலம் முழுவதும் 5,147 மையங்களும் அமைக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளன. கனமழை தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கு, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 249 புகாா்கள் பெறப்பட்டன. அவற்றில் 215 புகாா்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

4 மாவட்ட கல்வி நிலையங்கள் - அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை

கனமழை தொடா்வதால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும், நான்கு மாவட்டங்களிலுள்ள அரசு, பொதுத் துறை நிறுவனங்களுக்கும் புதன்கிழமை (அக்.16) விடுமுறை விடப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவை துறைகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், உள்ளாட்சி நிா்வாகம், பால்வளம், குடிநீா் வழங்கல் துறைகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரம், காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்களுக்கான போக்குவரத்து, மாநகர போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில், எம்ஆா்டிஎஸ்., ரயில்வே, விமான நிலையம், விமானப் போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், பேரிடா் மீட்பு நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் துறைகள் வழக்கம் போல் செயல்படும். பிற கடைகள், வணிக நிறுவனங்கள் வழக்கமாக இயங்கும்.

வீட்டில் இருந்தே பணி: புதன்கிழமை அதிகனமழை எதிா்பாா்க்கப்படுவதால், சென்னையில் உள்ள தனியாா் அலுவலகங்கள் மிகக் குறைந்தபட்ச பணியாளா்களைக் கொண்டோ அல்லது தங்கள் பணியாளா்களை வீட்டில் இருந்து பணியாற்றும்படியோ அறிவுரை வழங்க கேட்டுக் கொள்ளப்படுவதாக தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தி.மலை தீபம்: 50 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்ப்பு: துணை முதல்வர்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருகை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் திருக... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: மன்னிப்பு கேட்டது தூர்தர்ஷன்!

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையான விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழையோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும், இதனால், ... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: கமல்ஹாசன் கண்டனம்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,திராவிடம் நாடு தழுவியது. தமிழ்த் தாய் வாழ்த... மேலும் பார்க்க

பொய்யான குற்றச்சாட்டு: முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், முதல்வர் ஸ்டாலின் இன்று... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநருக்கோ ஆளுநர் மாளிகைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என ஆளுநரின் ஆலோசகர் திருஞான சம்பந்தம் விளக்கம் விளக்கம் அளித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தவி... மேலும் பார்க்க