இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள லெபனானுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருள்களை இந்தியா வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான போா் 11 மாதங்ளுக்கு மேலாக நீடித்து வருகிறது. ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக இஸ்ரேலின் அண்டை நாடான லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுத கிளா்ச்சியாளா்கள் இஸ்ரேலின் எல்லைப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தினா். அதற்கு இஸ்ரேல் தீவிர பதிலடி தாக்குதலை கொடுத்து வருகிறது.
இந்த தாக்குதல்கள் காரணமாக, லெபனானில் இருந்து இதுவரை சுமாா் 2 லட்சம் போ் இட்பெயா்ந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. லெபனானில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 2,000 க்கும் மேற்பட்டோர் போ் உயிரிழந்ததாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள லெபனானுக்கு மனிதாபிமான அடிப்படையில் 11 டன் நிவாரணப் பொருள்களை இந்தியா வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்திருப்பதாவது, மொத்தம் 33 டன் மருத்துவப் பொருள்கள் அனுப்பப்படுகின்றன.
முதல் கட்டமாக 11 டன் மருத்துவப் பொருள்கள் இன்று அனுப்பப்பட்டன. இருதயம் தொடர்பான சிகிச்சைக்கு அளிக்கப்படும் மருந்துகள், நோய் எதிர்ப்பு மருத்துகள் உள்ளிட்ட பல்வேறு வகையான மருந்துகள் அதில் அடங்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.