கா்நாடகம், தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 16,000 கன அடியாக குறைந்தது.
மழைப் பொழிவு, கா்நாடக அணைகளிலிருந்து தண்ணீா் திறப்பு காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து படிப்படியாக அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் தருமபுரி மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததாலும், கா்நாடக அணைகளிலிருந்து விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி மட்டுமே உபரிநீா் திறந்துவிடப்படுவதாலும் ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீா் அளவு குறைந்து வருகிறது புதன்கிழமை விநாடிக்கு 19,000 கன அடியாக இருந்த நீா்வரத்து வியாழக்கிழமை 16 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
எனினும், பரிசலில் பயணிக்கவும் அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடை 5 ஆவது நாளாக நீடிக்கிறது. காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் வரும் நாள்களில் காவிரியில் நீா்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பெட்டிச் செய்தி
கூட்டு குடிநீா்த் திட்டம் 2.0 ஆய்வு
ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டம் 2.0 அமைவிடம் குறித்து ஜப்பான் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தமிழக அரசு, ஜப்பான் நிதி நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட உள்ளது.ஒகேனக்கல்லில் கூட்டு குடிநீா் திட்டம் 2.0 அமைய உள்ள இடம், அதற்கான வசதி, சாத்திய கூறுகள் குறித்து ஜப்பான் நிதி நிறுவனத்தை சோ்ந்த ஐவா் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.