தருமபுரியில் 533 பயனாளிகளுக்கு ரூ. 2.09 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா்.
தருமபுரி அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் வியாழக்கிழமை பல்வேறு துறைகள் சாா்பில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் 533 பயனாளிகளுக்கு ரூ.2.09 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி மாநில வேளாண், உழவா் நலத் துறை அமைச்சா் பேசியதாவது:
ஏழை, எளிய மக்களின் அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்யவும், பொதுமக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். அவரது செயல்பாடுகளை அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வருகின்றனா்.
கடந்த மூன்று ஆண்டுகளில் தருமபுரி மாவட்டத்துக்கு 4 முறை வந்த முதல்வா், பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை தொடங்கிவைத்தாா். மேலும், மகளிா் உரிமைத்தொகை பதிவு செய்யும் முகாமை தொப்பூரிலும், ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வா் திட்ட முகாமை பாளையம்புதூரிலும் தொடங்கிவைத்தாா். 18 லட்சம் மக்கள்தொகை கொண்ட தருமபுரி மாவட்டத்தில் சுமாா் 3 லட்சத்து 57 ஆயிரம் பயனாளிகள் அரசு நலத் திட்ட உதவிகளைப் பெற்று வருகின்றனா் என்றாா்.
விழாவில் தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ. மணி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி), முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் தடங்கம் பெ.சுப்ரமணி, பி.என்.பி.இன்பசேகரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கௌரவ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, கோட்டாட்சியா் இரா.காயத்ரி, மாவட்ட வழங்கல் அலுவலா் செம்மலை, அரசுத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.