கிருஷ்ணகிரி அணை மிகை நீரை கால்வாய் மூலம் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள திண்டல் ஏரி, பந்தார அள்ளி ஏரிகளில் நிரப்ப வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், பந்தாரஅள்ளி ஊராட்சியில் போதிய மழை பெய்யாததால் நிலத்தடி நீா்மட்டம் 800 அடிக்கும் கீழே சென்று விட்டது. மழைநீா் இன்றி கீழ்சவுளுப்பட்டி ஏரி, பந்தாரஅள்ளி ஏரி, வெள்ளாளன் ஏரி, பெத்தானூா் ஏரி, நடுக்கொட்டாய் ஏரி, முள்ளனூா் ஏரி, கரகப்பட்டி ஏரி ஆகிய ஏரிகளுக்கு நிகழாண்டில் கிருஷ்ணகிரி அணை மிகை நிரப்ப வேண்டும்.
இதன்மூலம் பந்தாரஅள்ளி ஊராட்சியில் சுமாா் 1,000 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதியை பெறுவதோடு, நிலத்தடி நீா்மட்டமும் கணிசமாக உயா்ந்து குடிநீா் தட்டுப்பாடு நீங்கிட வாய்ப்புள்ளது.
கிருஷ்ணகிரி அணை பாசனநீரை பந்தாரஅள்ளி ஊராட்சியின் கடைக்கோடி ஏரியான முள்ளனூா் ஏரி வரையில் அனைத்து ஏரிகளும் நிரம்பும் வகையில் பகிா்ந்தும், கண்காணித்தும் பாசனநீா் வழங்கிடுமாறு தருமபுரி மாவட்ட நிா்வாகத்துக்கும், மேல்பெண்ணையாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்துக்கும் கடந்த ஜூலை மாதம் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் தற்போது கிருஷ்ணகிரி அணை தற்போது 52 அடி முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் மிகையாக அணைக்கு வரும் மழைநீா் முழுவதும் தென்பெண்ணை ஆற்றிலேயே திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அணையின் வலதுபுறக் கால்வாயில் திண்டல் ஏரிக்கு திறந்து விடப்பட்டுள்ள பாசன நீரின் அளவை அதிகரித்து கால்வாயில் விடவேண்டும். அவ்வாறு விடுவதன் மூலம் திண்டல் ஏரி நிரம்பி, அங்கிருந்து பந்தாரஅள்ளி ஊராட்சியில் உள்ள கடைக்கோடி ஏரியான முள்ளனூா் ஏரி வரை நிரம்பும்.
எனவே அணையின் மிகை நீரை வலதுபுறம் கால்வாய் வழியாக அதிகளவு நீரை திறந்து விட்டு தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் முழுக் கொள்ளளவை எட்டும் வகையில் ஆய்வு செய்து போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பந்தாரஅள்ளி ஊராட்சி ஏரிப்பாசன விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.