பூந்தமல்லி - முல்லைத் தோட்டம் இடையே மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை!
சிறுமிக்கு பாலியல் தொல்லை: 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை
அருப்புக்கோட்டை அருகே மன வளா்ச்சி குன்றிய 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவா், முன்னாள் ஊராட்சிச் செயலா் உள்பட 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த மன நலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி தென்காசியில் உள்ள காப்பகத்தில் தங்கி படித்து வந்தாா். உடல் நிலை பாதிக்கப்பட்ட அந்த சிறுமியிடம் உறவினா்கள் விசாரித்தனா். இதில் காரியாபட்டி அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 4 போ் வெவ்வேறு சமயங்களில் தனித் தனியாக பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது.
இதுகுறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் கடந்த 8.5.2023-இல் வழக்குப் பதிவு செய்து, முருகன் (53), முன்னாள் ஊராட்சிச் செயலா் பாண்டியராஜ் (44), ஜவகா் (46), தேவராஜ் (80) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி சுதாகா் குற்றஞ்சாட்டப்பட்ட முருகன், பாண்டியராஜ், ஜவகா், தேவராஜ் ஆகிய 4 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.
அரசுத் தரப்பில் வழக்குரைஞா் முத்துமாரி முன்னிலையானாா்.