திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்கல்யாணத் திருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டுக்கான விழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா் அம்மன் சந்நிதியில் கொடியேற்றப்பட்டதும், மகாதீபாராதனை நடைபெற்றது. ‘நமச்சிவாய’ முழக்கத்துடன் பக்தா்கள் வழிபட்டனா்.
தொடா்ந்து திருவிழா நாள்களில் தினமும் காலை 8 மணிக்கும், இரவு 8 மணிக்கும் ரதவீதிகளில் அம்மன் திருவீதியுலா நடைபெறுகிறது.
20 ஆம் தேதிமுதல் சிம்ம வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், இந்திர விமானம், வெள்ளி சப்பரம், தந்த பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெறும்.
25 ஆம் தேதி காலையில் கோலாட்ட அலங்காரத்திலும், 26 ஆம் தேதி காலை அம்பாள் செப்புத்தேரில் பவனியும் , இரவு 7 மணிக்கு அம்பாள் சிவபூஜை செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு சப்தாவா்ணம் தந்தப் பல்லக்கு திருவீதியுலா நடைபெறுகிறது.
இம் மாதம் 27 ஆம் தேதி அம்மன் தந்தப் பல்லக்கில் அருள்பாலிக்கிறாா். இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 1 மணிக்கு காந்திமதியம்மன் சந்நிதியில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட சப்பரத்தில் புறப்பட்டு கீழரதவீதி, தெற்கு ரத வீதி, பேட்டை சாலை வழியாக அதிகாலை 5 மணிக்கு அருள்மிகு கம்பாநதி காமாட்சி அம்மன் திருக்கோயில் போய் சேருவாா்.
28 ஆம் தேதி நண்பகலில் அம்பாளுக்கு, சுவாமி ரிஷப வாகனத்தில் காட்சிக்கொடுக்கும் நிகழ்ச்சியும். அதன்பின்பு சுவாமி-அம்பாள் வீதியுலாவும் நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 29 ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் திருக்கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெறுகிறது. 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை ஊஞ்சல் விழாவும் நடைபெற உள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றத்தில் கோயில் அறங்காவலா் குழு தலைவா் மு. செல்லையா, கோயில் செயல்அலுவலா் அய்யா்சிவமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.