திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் 2.5 டன் தரமற்ற குடிநீா், குளிா்பான பாட்டில்கள் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டன.
கல்லிடைக்குறிச்சி, முக்கூடல், சேரன்மகாதேவி ஆகிய பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு - சுகாதார நியமன அலுவலா் டாக்டா் சசி ஷீலா, உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வராஜ் ஆகியோா் தலைமையில் அத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். அதில் தரமற்ற வகையில் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த குளிா்பானம், குடிநீா் பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
மேலும் முக்கூடல் பகுதியில் பள்ளிக்கு அருகில் பாதுகாப்பற்ற முறையில் அரசு அனுமதியின்றி இயங்கி வந்த 2 தனியாா் குடிநீா், குளிா்பான தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா். பறிமுதல் செய்யப்பட்ட 2.5 டன் எடையுள்ள குடிநீா், குளிா்பான பாட்டிகள் முக்கூடல் பேரூராட்சி குப்பை கிடங்கு பகுதியில் கனரக வாகனங்களைக் கொண்டு அழிக்கப்பட்டன.
அப்போது உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பாலசுப்பிரமணியன், முகம்மது ரசூல், பேரூராட்சி துணைத் தலைவா் இரா. லெட்சுமணன், பேரூராட்சி செயல் அலுவலா் அரசப்பன், வருவாய் ஆய்வாளா் கோமதி, அதிகாரிகள் உடனிருந்தனா்.