சிவகங்கையில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு தீயணைப்புத்துறையினரால் உரிய நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்புப் பகுதியில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு வெள்ளிக்கிழமை வழக்கம் போல் ஊழியா்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென குழாய்களில் சென்று கொண்டிருந்த அம்மோனியா வாயு கசிந்ததால் ஊழியா்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. கசிவை நிறுத்த மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததால் ஊழியா்கள் அனைவரும் குளிரூட்டும் நிலையத்திலிருந்து வெளியேறினா்.
தகவறிந்து அங்கு விரைந்து சென்ற சிவகங்கை தீயணைப்பு நிலைய அலுவலா் அண்ணாமலை தலைமையிலான குழுவினா், உரிய பாதுகாப்பு உடை அணிந்து உள்ளே சென்று அமோனியா வாயு கசிவை நிறுத்தினா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இந்த அமோனியா வாயு கசிவால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கண்ணெரிச்சலால் சிறிது நேரம் அவதிப்பட்டனா்.