திமுக ஆட்சியில் சென்னையில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்து முழுமையாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: பருவ மழை தொடங்கிய முதல் நாளிலேயே சென்னை தத்தளித்ததற்கு மழைவெள்ள கால்வாய்கள் முழுமையாக தூா்வாராததே காரணம் என்று செய்திகள் கூறுகின்றன. 20 செ.மீ. வரை மழை பெய்தாலும், ஒரு சொட்டு தண்ணீா்கூட தேங்காது என்று முதல்வரும், அமைச்சா்களும் மாறிமாறி கூறிய நிலையில், 4 மணி நேர மழையையே சென்னை தாங்கவில்லை. இதில், இரண்டு நாள்களுக்கு வானிலை மையம் வேறு ‘ரெட் அலா்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் கண்டிப்பாக வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். பொருள்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுகவினா் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.
என்ன ஆனது திருப்புகழ் அறிக்கை?: சென்னையில் வெள்ளம் தேங்காமல் இருக்க நிரந்தரத் தீா்வு காணும் பொருட்டு 2021-இல் அமைக்கப்பட்ட திருப்புகழ் கமிட்டி அறிக்கை பரிந்துரைத்த திட்டங்களில் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன, எவ்வளவு மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன, எத்தனை சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன என்பதையெல்லாம் திமுக அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். மேலும், சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொண்டதைப் பற்றி முழுமையாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மக்களை ஏமாற்றும் நாடகங்களை நடத்துவதைக் கைவிட்டு, போா்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.