12,000 ஒப்பந்தப் பணியாளா்களை மாநகராட்சி பணிவரன்முறைப்படுத்த உள்ளது: அதிஷி
தில்லியில் செவ்வாய்கிழமை நடைபெறும் மாநகராட்சி அவைக் கூட்டத்தில் 12,000 ஒப்பந்தப் பணியாளா்களை மாநகராட்சி பணிவரன்முறைப்படுத்த உள்ளதாக ஆம் ஆத்மி மூத்தத் தலைவா் அதிஷி தெரிவித்தாா்.
இது தொடா்பாக, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் எம்சிடி மேயா் மகேஷ் கிஞ்சி, துணை மேயா் ரவீந்தா் பரத்வாஜ் மற்றும் அவைத் தலைவா் முகேஷ் கோயல் ஆகியோருடன் பங்கேற்ற தில்லி முன்னாள் முதல்வா் அதிஷி கூறியதாவது:
ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான எம்சிடியில் தற்காலிக ஊழியா்களை பணிவரன்முறைப்படுத்த ஆம் ஆத்மி உறுதிபூண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், நாங்கள் 4,500 (ஒப்பந்த) தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்துள்ளோம்.
இந்நிலையில், பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெறும் மாநகராட்சி அவைக் கூட்டத்தில், துப்புரவுத் தொழிலாளா்கள், இளநிலைப் பொறியாளா்கள், மூத்த பொறியாளா்கள், தோட்டக்காரா்கள் மற்றும் பிற ஒப்பந்தப் பணியாளா்கள் உள்பட அனைத்துத் துறைகளிலும் மேலும் 12,000 பணியாளா்களை முறைப்படுத்த உள்ளோம்.
பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு தற்காலிக ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழிலாளா்களின் உரிமைகளுக்காக ஆம் ஆத்மி கட்சி உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. தற்போது 12 ஆயிரம் ஒப்பந்தப் பணியாளா்களை பணி வரன்முறைப்படுத்தும் முடிவு தில்லி நகரின் வரலாற்றில் மிகப்பெரியதாக இருக்கும்.
அதேவேளையில், பாஜக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதைத் தவிா்ப்பதற்காக அவ்வப்போது சாக்குப்போக்குகளைக் கூறி வருகிறது. பாஜக தனது வாக்குறுதிகளில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான், புதிய முதல்வா் நியமிக்கப்படுவதற்கு முன்னா், தில்லி அரசு அதன் நிதி நிலையைத் தெளிவாக முன்வைத்திருந்ததை உறுதிப்படுத்தினோம்.
ஆம் ஆத்மி அரசின் கீழ் தில்லியின் பொருளாதார வளா்ச்சியைப் பொருத்தம்டில், 2015-இல் கட்சி முதன்முதலில் ஆட்சி அமைத்தபோது, நகரத்தின் பட்ஜெட் ரூ.30,000 கோடியாக இருந்தது. மத்திய அரசிடமிருந்து எந்த நிதியுதவியும் பெறவில்லை என்றாலும், தில்லியின் பொருளாதாரத்தை வலுப்படுத்தினோம். இன்றைக்கு, 2024-25-க்கான பட்ஜெட் ரூ.77,000 கோடியை எட்டியுள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் 2.5 மடங்கு அதிகரிப்பைக் காட்டுகிறது என்றாா் அதிஷி.