3 வழித்தடங்களில் 160 கி.மீ. அதிவேக ரயில் சேவை! ரயில்வே அறிவிப்புகள்!
தமிழகத்தில் 3 வழித்தடங்களில் மித அதிவேக ரயில் சேவைகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றி வருகிறார்.
இதையும் படிக்க : மகளிருக்கான அறிவிப்புகள்! மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 37,000 கோடி கடன்!
அப்போது, மெட்ரோ உள்ளிட்ட ரயில் சேவைகள் தொடர்பான அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.
அவர் பேசியதாவது:
”ரூ. 63,000 கோடி மதிப்பில் 119 கி.மீ. தொலைவுக்கு சென்னையில் மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக பூந்தமல்லி - போரூர் இடையிலான உயர்வழித்தடம் இந்தாண்டு டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் பணிக்கு தயாரிக்கப்பட்ட திட்டங்கள் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை கோயம்பேடு முதல் ஆவடி வரை நீட்டிக்கும் வகையில் திட்டங்கள் பெறப்பட்டுள்ளன.
தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் உயர்நீதிமன்றம் வரையிலும் மெட்ரோ நீட்டிப்பதற்கான ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
வேகமாக வளர்ந்து வரும் தமிழக பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு தில்லி - மீரட் இடையே உருவாக்கப்படும் மித அதிவேக ரயில் போக்குவரத்து போன்று மண்டலப் போக்குவரத்தை தமிழகத்தில் ஏற்படுத்த சாத்தியக்கூறுகள் சென்னை மெட்ரோ நிர்வாகம் மூலம் ஆய்வு செய்யப்படும்.
மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் மித அதிவேக ரயில் அமைப்பை மூன்று இடங்களில் அமைக்க சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படும்.
சென்னை - செங்கல்பட்டு - விழுப்புரம் வழியாக 167 கி.மீ., சென்னை - காஞ்சிபுரம் - வேலூர் வழியாக 140 கி.மீ., கோவை - திருப்பூர் - சேலம் வழியாக 185 கி.மீ. தொலைவுக்கு ஆய்வு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.