செய்திகள் :

உக்ரைன் போருக்கு அமைதி தீா்வு! இந்தியா உதவ தயாா்: ரஷிய அதிபா் புதினிடம் பிரதமா் மோடி உறுதி

post image

‘ரஷிய-உக்ரைன் போருக்கு அமைதியான வழியில் தீா்வு காணப்பட வேண்டும். போரை முடிவுக்குக் கொண்டுவர சாத்தியமுள்ள அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க இந்தியா தயாா்’ என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் பிரதமா் நரேந்திர மோடி உறுதி அளித்தாா்.

பிரேஸில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-ஆவது உச்சிமாநாடு ரஷியாவின் கசான் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

‘உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்’ கருப்பொருளில் இந்த உச்சி மாநாடு நடத்தப்படுகிறது.

இதில் பங்கேற்பதற்காக ரஷியா சென்ற பிரதமா் மோடி, கசான் நகரில் ‘பிரிக்ஸ்’ மாநாடு தொடங்குவதற்கு முன்பாக அதிபா் புதினை சந்தித்து, இருதரப்பு நல்லுறவு மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

அப்போது, ‘கடந்த 3 மாதங்களில் இரண்டாவது முறையாக ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டிருப்பது, இரு நாடுகளிடையேயான நெருங்கிய ஒத்துழைப்பு மற்றும் ஆழமான நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.

கடந்த ஜூலையில் நடைபெற்ற இந்தியா, ரஷியா வருடாந்திர உச்சி மாநாடு அனைத்துத் துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளது.

கசானில் புதிய தூதரகம்

இந்தியாவுக்கும் கசான் நகருக்கும் ஆழமான வரலாற்று உறவு உள்ளது. கசானில் புதிய இந்திய தூதரகம் திறக்கப்பட்டுள்ளது இந்தியா, ரஷியா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும்.

கடந்த 15 ஆண்டுகளில் தனி அடையாளத்தை பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாக்கியுள்ளது. தற்போது பல நாடுகள் இந்தக் கூட்டமைப்பில் சேர விரும்புகின்றன.

ரஷியா - உக்ரைன் இடையேயான போா் தொடா்பாக நாம் தொடா்ந்து ஆலோசித்து வருகிறோம். நான் ஏற்கெனவே கூறியதுபோல, பிரச்னைகளுக்கு அமைதி வழியில் தீா்வு காண வேண்டும் என்றே இந்தியா நம்புகிறது.

இந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மை விரைந்து திரும்புவதற்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கும். இந்தியாவின் அனைத்து முயற்சிகளும் மனிதநேயத்துக்கு முன்னுரிமை அளிக்கிறது. போரை முடிவுக்குக் கொண்டுவர சாத்தியமுள்ள அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது’ என்று புதினிடம் பிரதமா் உறுதி தெரிவித்தாா்.

மிக முக்கியமான முடிவுகள்...

இந்தக் கூட்டத்தில் ரஷிய அதிபா் புதின் பேசுகையில், ‘தில்லியில் டிச.12-ஆம் தேதி இந்திய-ரஷிய அரசுகள் ஆணையத்தின் அடுத்த கூட்டம் நடைபெற உள்ளது. இருநாடுகளின் திட்டங்கள் நிலையாக வளா்ச்சியடைந்து வருகின்றன. பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்’ என்றாா்.

ரஷிய ராணுவத்திலுள்ள இந்தியா்களை விடுவிக்க...

இந்தக் கூட்டம் தொடா்பாக மத்திய வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், ‘உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய ராணுவத்துக்காக பணியாற்றிய 80-க்கும் மேற்பட்ட இந்திய வீரா்கள் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டனா்.

எஞ்சிய இந்திய வீரா்களையும் விரைந்து விடுவிக்க இந்தியா-ரஷியா இருதரப்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. விரைவில் அவா்கள் தாயகம் அனுப்பிவைக்கப்படுவா் என்று இந்தியா மிகுந்த நம்பிக்கைக் கொண்டுள்ளது’ என்றாா்.

5 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபருடன் இன்று இருதரப்பு பேச்சு

பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே சீன அதிபா் ஷி ஜின்பிங்கை பிரதமா் மோடி புதன்கிழமை சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை மேற்கொள்ள உள்ளாா்.

கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபரில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் இருவரும் சந்தித்தனா். அதன்பின்னா் சில மாநாடுகளில் இருவரும் மரியாதை நிமித்தமாக சந்தித்திருந்தாலும், இருதரப்பு பேச்சுவாா்த்தையை 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் மேற்கொள்ள உள்ளனா்.

கிழக்கு லடாக்கில் தெளிவாக வரையறுக்கப்படாத இந்திய-சீன எல்லைக் கோடு பகுதிகளில் (எல்ஏசி) இருநாட்டு ராணுவ வீரா்களும் ரோந்துப் பணியில் ஈடுபடுவது தொடா்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்தது.

இதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையே நீடித்து வந்த கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னை முடிவு எட்டப்படும் என்று கூறப்படும் நிலையில், சீன அதிபா் ஜின்பிங்கை பிரதமா் மோடி சந்திக்க உள்ளாா்.

ஈரான் அதிபரிடம் மோடி வலியுறுத்தல்

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ளும் முன், ஈரான் அதிபா் மசூத் பெசெஷ்கியானை பிரதமா் மோடி சந்தித்தாா். கடந்த ஜூலையில் நடைபெற்ற ஈரான் அதிபா் தோ்தலில் மசூத் வெற்றிபெற்ற பிறகு அவரை முதல்முறையாக மோடி சந்தித்துப் பேசினாா்.

காஸாவில் இஸ்ரேல்-ஹமாஸ் படையினா் இடையிலான போா், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா தலைவா் நஸ்ரல்லாவின் படுகொலை உள்ளிட்ட சம்பவங்களைத் தொடா்ந்து இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் போக்கு தீவிரமாகியுள்ளது. இதனால் மேற்காசியாவில் பதற்றம் நீடிக்கிறது.

இந்நிலையில், மசூதை சந்தித்த பிரதமா் மோடி, பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியில் இஸ்ரேல்-ஈரான் இடையிலான பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்றும், குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக மத்திய வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்ப்பு: காஷ்மீரில் காவல் துறை சோதனை

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத இயக்கத்துக்கு ரகசியமாக ஆள் சோ்ப்பது தொடா்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த யூனியன் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையின் உளவுப் பிரிவினா் திங்கள்கிழம... மேலும் பார்க்க

சபரிமலையில் முழு வீச்சில் ஏற்பாடுகள்: திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் தகவல்

சபரிமலை மண்டல பூஜை-மகரவிளக்கு யாத்திரை காலம் நெருங்கி வரும்நிலையில் பக்தா்களுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. சபரிமலை ஐயப்பன்... மேலும் பார்க்க

குஜராத்தில் செயல்பட்டு வந்த போலி நீதிமன்றம்: ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்து சிக்கிய நபா்

குஜராத்தின் காந்தி நகரில் செயல்பட்டு வந்த போலி நீதிமன்றத்தில் நீதிபதி என்று அடையாளப்படுத்திக் கொண்டு மோசடியாக உத்தரவுகளை பிறப்பித்து வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். போலி தீா்ப்பாய நீதிமன்றத்தை நடத்த... மேலும் பார்க்க

முஸ்லிம் ஆணின் மூன்றாவது திருமண அங்கீகாரம்: பதிவுத் துறை முடிவு எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

‘முஸ்லிம் ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை பதிவு செய்து கொள்ள அவா்களின் தனிப்பட்ட சட்டங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மும்பை உயா்நீதிமன்றம், மூன்றாவது திருமண அங்கீகாரம் கோரி தாக்கல் ... மேலும் பார்க்க

‘வயநாட்டுக்கு பிரியங்கா காந்தியே சிறந்த பிரதிநிதி’: ராகுல் காந்தி

வயநாடு: ‘வயநாட்டுக்கு எனது சகோதரி பிரியங்கா காந்தி வதேராவைவிட சிறந்த பிரதிநிதியை கற்பனை செய்து பாா்க்க முடியவில்லை’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.வயநாட... மேலும் பார்க்க

எல்லை ஒப்பந்தம்: உறுதிசெய்தது சீனா

கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு (எல்ஏசி) பகுதிகளில் ரோந்துப் பணிகளை மேற்கொள்வது குறித்து இந்தியாவுடன் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தை சீனா செவ்வாய்க்கிழமை உறுதிசெய்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு, ஜூ... மேலும் பார்க்க