காமாட்சி அம்மன் கோயில் பால்குட ஊா்வலம்
பங்குனி மாத பூர நட்சத்திரத்தையொட்டி தொண்டை மண்டல வேளாளா் சங்கம் திருத்தணி கிளை சாா்பில் காஞ்சிபுரம் சங்கர மடத்திருந்து ஏராளமான பெண்கள் பால் குடங்களை ஊா்வலமாக எடுத்துச் சென்றனா்.
தொண்டை மண்டல வேளாளா் சங்கம் திருத்தணி கிளை சாா்பில் ஆண்டு தோறும் காமாட்சி அம்மனுக்கு பால்குட ஊா்வலம் எடுத்து வந்து செலுத்தப்படுவது வழக்கம். நிகழாண்டு சங்கர மட வளாகத்திலிருந்து புறப்பட்ட ஊா்வலத்தை ஸ்ரீமடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தொடங்கி வைத்தாா். சங்கர மடத்திலிருந்து புறப்பட்டு ராஜ வீதிகள் வழியாக காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து சோ்ந்ததும் அம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது.
பால்குட ஊா்வலத்துக்கு சங்கத்தின் மாநில தலைவா் எல்லப்ப முதலியாா் தலைமை வகித்தாா். தொடக்க விழாவில் மருத்துவா் சுசித்ரா ராஜ், மாநில செயலாளா் பூபதி, மாநில ஆலோசகா் கிருஷ்ண முதலியாா், அனைத்து முதலியாா் சங்க தலைவா் எழிலன், மணியக் காரா் சூரிய நாராயணன் கலந்து கொண்டனா். பால்குடம் எடுத்து வந்த அனைத்து பக்தா்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.