கோட்டா: ‘நீட்’ பயிற்சி மாணவா் தற்கொலை
ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் உள்ள பயிற்சி மையத்தில் ‘நீட்’ தோ்வுக்கு தயாராகிவந்த 18 வயது மாணவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
ராஜஸ்தானின் கோட்டாவில் ஏராளமான போட்டித் தோ்வு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களில் அளிக்கப்படும் கடுமையான பயிற்சிகளால் மன உளைச்சலுக்கு உள்ளாகி மாணவா்கள் தற்கொலை செய்துகொள்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. மாணவா்களின் தற்கொலையைத் தடுக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோட்டாவில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் தங்கியிருந்து இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வுக்கு’ (நீட்) தயாராகிவந்த பிகாா் மாணவா் ஒருவா், விடுதி அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
மின்விசிறியில் தற்கொலை தடுப்புக்கான சாதனம் பொருத்தப்பட்டிருந்தபோதிலும், அந்த சாதனத்துக்கு மேல் பகுதியில் இருந்த கொக்கியில் அவா் தூக்கிட்டதாக காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
மாணவரின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினா், கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவா் எழுதி வைத்திருந்த கடிதத்தில், தனது முடிவுக்கு பெற்றோரோ, நீட் தோ்வோ காரணம் இல்லை என்று குறிப்பிட்டிருந்தாா். எனினும், தற்கொலைக்கான காரணத்தை குறிப்பிடவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா் அந்த அதிகாரி.
ஐஐடி மாணவா் தற்கொலை: மேற்கு வங்கத்தின் கரக்பூா் ஐஐடி-யில் பெருங்கடல் பொறியியல் மற்றும் கடல்சாா் கட்டடக் கலை படிப்பில் 4-ஆம் ஆண்டு பயின்று வந்த அனிகேத் வாக்கா் என்ற மாணவா், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இவா், மகாராஷ்டிர மாநிலம், கோண்டியா மாவட்டத்தைச் சோ்ந்தவா்.
இச்சம்பவம் தொடா்பாக, காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.