செய்திகள் :

சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வதந்திகள் பெரும் சவால்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

post image

சென்னை: சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் சமூகவலைதளத்தில் பரவும் வதந்திகள் பெரும் சவாலாக உள்ளன. சமூகவலைதள வதந்திகளை கண்காணித்து மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தென் மாநிலங்களின் காவல்துறை இயக்குநர்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டை தொடங்கிவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு நீர் மேலாண்மை போன்ற பல்வேறு அடிப்படையில் தென்மாநிலங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நாம் செயல்பட்டு வருகிறோம். அந்தவகையில் மிகமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளான போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், மாநிலங்களுக்கிடையேயான குற்றச்செயல்கள், இணையவழி குற்றங்கள் போன்ற தீவிர குற்றச்சம்பவங்களில் இருந்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற பொதுவான குறிக்கோளை அடைவதற்காக நாம் கூடியிருக்கிறோம்.

இத்தகைய குற்றங்களை எதிர்கொள்வதில் தமிழ்நாடு காவல்துறை பல்வேறு முன்னற்றங்களை அடைந்திருக்கிறது. தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரகவனம் செலுத்தி வருகிறது. போதைப்பொருள் விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றை தடுப்பதற்கு நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்.

தமிழ்நாடு காவல்துறையின் தொடர் முயற்சிகளின் பலனாக, மாநிலத்தில் கஞ்சா பயிரிடப்படுவது தடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு வியூகங்களை நாங்கள் கையாண்டு வருகிறோம். ஒன்று, கைது செய்வதோடு மட்டுமின்றி சொத்து பறிமுதல், வங்கிகணக்கு முடக்கம், கடைகளுக்கு சீல், கடுமையான அபராதம், கடும் சிறைத்தண்டனை பெற்றுத்தருவது உள்ளிட்ட தீவிர சட்ட அமலாக்கம் மூலமாக போதைப்பொருள்களை ஒழிப்பது!

இரண்டாவது, போதைப்பொருட்களின் தீமைகளை மாணவர்கள் மத்தியில் பிரசாரம் செய்வது, கல்வி நிலையங்கள் அருகில் போதைப் பொருள் விற்பனையைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள்! இவை மிக நல்ல பலன்களை கொடுத்திருக்கிறது.

உயர் அதிகாரிகளுடன் நடத்தப்படும் தொடர் ஆய்வுக் கூட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் சரியான பாதையில் செல்வது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

போதைப்பொருள் குற்றவாளிகளின் மீது பொருளாதார நடவடிக்கைகள் எடுப்பதில் தமிழ்நாடு காவல்துறை முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. இதன் மூலம் குற்றவாளிகளின் பொருளாதார பலம் தகர்க்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், போதைப்பொருள் குற்றவாளிகளின் தொடர்பு மற்றும் அவர்களது சொத்துகள் பல மாநிலங்களில் பரவிகிடக்கிறது.

போதைப் பொருட்களை ஒழிக்க, ஒன்றிணைந்த முயற்சிகள் தேவைப்படுகிறது என்பதால்தான், நாம் ஒன்று கூடியிருக்கிறோம். குற்றவாளிகளை கைது செய்வதற்கும், விசாரணை மேற்கொள்ளவும் உங்கள் மாநிலத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு காவல்துறையினருக்கு உங்கள் ஒத்துழைப்பு மிகவும் தேவை. குறிப்பாக, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் வருவதை தடுக்க, தமிழ்நாடு காவல்துறையினரும், அண்டை மாநில காவல்துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

சமீபத்தில், கேரள காவல்துறையினர் கொடுத்த தகவலை வைத்து, நாமக்கல் மாவட்டத்தில், ஏ.டி.எம். பணத்தை கொள்ளையடிக்கும் கொடுங்கும்பலை தமிழ்நாடு காவல்துறையினர் வெற்றிகரமாக கைது செய்தார்கள். இந்தக் குற்றவாளிகள் கேரளாவில் வெவ்வேறு இடங்களில் ஏ.டி.எம் கொள்ளைச் சம்பவத்தை நடத்திக்கொண்டு, திருச்சூரில் இருந்து தப்பித்திருக்கிறார்கள். இந்த கும்பல் பல்வேறு மாநிலங்களிலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்ததது. தமிழ்நாடு காவல்துறை உடனடியாக சம்பந்தப்பட்ட மாநிலங்களை உஷார்படுத்தியது. இந்த பாராட்டுக்குரியது. இது போன்ற ஒருங்கிணைப்புகளை நாம் அனைவருக்குள்ளும் முன்னெடுப்பதுதான் இதுபோன்ற கூட்டங்களின் நோக்கம்.

தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மாநிலத்துக்குள்ளே நுழைவதை தடுக்க, மாநில எல்லைகளில் கடுமையான சோதனைகளை மேற்கொள்ளவேண்டியது அவசரத் தேவையாக இருக்கிறது. தானியங்கி வாகன எண் கண்டறியும் கேமராக்கள், அதிநவீன ஸ்கேனர்கள் போன்ற நவீன தொழில்நுட்பங்களை எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் பயன்படுத்துவது மூலம், தடைசெய்யப்பட்ட பொருட்கள், ஏற்கெனவே, குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட வாகனங்கள் மற்றும் குற்றவாளிகளை கண்டறியும் திறனை நாம் மேம்படுத்த இயலும்.

இணையவழி குற்றம் என்பது எந்தவித எல்லையும் இல்லாமல், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, பெருகிவரக்கூடிய மிகவும் சிக்கலான ஒரு பிரச்சினை. புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு இன்றைக்கு சிறப்பான வகையில் முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

பெரும்பாலும், இணையவழி குற்றவாளிகளை பிடிக்க ஒரு மாநிலத்தின் காவல்துறை மற்றொரு மாநிலத்துக்குச் செல்லவேண்டிய நிலையில், அவர்கள் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே, இணையவழிக் குற்றங்களை தடுப்பதிலும் நாம் இணைந்து செயல்படவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

படித்து முடித்துவிட்டு, வெளிநாட்டில் வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து, அவர்களை அடிமைகளாக, கணினிசார் குற்றங்களில் ஈடுபடுத்தும் சைபர் அடிமைத்தனம் பிரச்னை தற்போது பெரிய அளவில் உருவெடுத்திருக்கிறது. சில தென்கிழக்கு நாடுகளை அடிப்படையாக வைத்து செயல்படும் குற்றவாளிகளின் பிடியில் சிக்கி, நம்முடைய இளைஞர்கள் பலர் மனரீதியாவும், உடல்ரீதியாவும் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். இதுபோன்று வளர்ந்துவரும் அச்சுறுத்தல்களை போக்குவதற்கு நமக்குள்ளே இருக்கின்ற ஒருங்கிணைப்பை பலப்படுத்தவேண்டும்.

இதையும் படிக்க |3500 அரசு மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுன்டர்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

எந்தவித தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதமாக இருந்தாலும், அவற்றைக் கட்டுப்படுத்தி தடுக்க, முழு ஒத்துழைப்பையும், ஒருங்கிணைப்பையும் பலப்படுத்த வேண்டும்.

இன்றைக்கு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு சமூகவலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் பெரும் பிரச்னையாக இருந்து கொண்டிருக்கிறது. அவற்றின் மூலம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களை நாம் பார்க்க முடிகிறது. ஏன், தமிழ்நாட்டிலேயே அப்படியொரு முயற்சியை மேற்கொண்டு பொது அமைதியை சீர்குலைக்க முயன்றதை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பல மாநிலங்களில் இருந்து வதந்தி பரப்பியவர்களை தேடிக் கண்டுபிடித்து, அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்தது.

தமிழ்நாடு காவல்துறையானது, அனைத்து தளங்களிலும் சட்ட அமலாக்கத்திற்கு, குறிப்பாக போதைப்பொருட்கள், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், மாநிலங்களுக்கிடையே செயல்படும் குற்றவாளி கும்பல்கள் மற்றும் கணினிசார் குற்றங்கள், சமூக வலைதள வதந்திகள் ஆகியவற்றின் மீதான தீவிர சட்ட நடவடிக்கைக்கு மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை உறுதிபடுத்துகின்ற வகையில், மற்ற மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் பொறுப்பை ஏற்றிருக்கிறது.

இதையும் படிக்க |தமிழ் பேசத் தெரிந்தவர்தான் அடுத்த பிரதமர்! பிரபல ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் கணிப்பு

அத்தகைய பலமான ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் பரிமாற்றம் மூலம் எத்தகைய சட்டம்-ஒழுங்கு, பொது அமைதி, உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் சமாளித்து, மக்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய நாம் கடமையாற்றுவோம்! ஒருங்கிணைந்து செயலாற்றுவோம்!!

போதைப்பொருட்களாக இருந்தாலும், குற்றங்களாக இருந்தாலும், இணையவழி குற்றங்களாக இருந்தாலும், அதை தடுக்க நம்முடைய ஒருங்கிணைந்த முயற்சிதான் தேவைப்படுகிறது. இவ்வாறு நாம் சேர்ந்து பணியாற்றுவதன் மூலம், நம்முடைய மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களை காப்பதோடு, அனைவருக்கும் ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தையும், நம் மாநிலங்களின் முன்னேற்றத்தையும் உறுதி செய்யலாம் என்றார்.

ஆளுநர் விழாவில் சரியாகப் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று(சனிக்கிழமை) கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாகப் பாடப்பட்டது. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொ... மேலும் பார்க்க

தமிழ் பேசத் தெரிந்தவர்தான் அடுத்த பிரதமர்! பிரபல ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் கணிப்பு

அடுத்த பிரதமர் தமிழ் மொழி பேசத் தெரிந்தவராகத்தான் இருப்பார் என்று தமிழ்நாட்டின் பிரபல ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனிக்கிழமை ஒளிபரப்பான ‘ஒளிமயமான எதிர... மேலும் பார்க்க

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

இரிடியம் தருவதாகக் கூறி கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி செய்யப்பட்டது தொடா்பாக 4 பேரை கைது செய்து, 7 பேர் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.கேரள மாநிலம், பாலக்காடு, காரக்குறிச... மேலும் பார்க்க

பெண்களை தவறாக விடியோ எடுத்த போக்குவரத்து காவலர்: பிடித்து கொடுத்த பொதுமக்கள்!

கோவை சாய்பாபா காலனி பேருந்து நிறுத்தம் அருகே பெண்களை தவறாக விடியோ போக்குவரத்து காவலரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.கோவை சாய்பாபா காலனி பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை இர... மேலும் பார்க்க

மோடி அரசு தமிழ்மொழிக்கு என்ன செய்தது?: ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

2013-2014 முதல் 2022 -2023-ஆம் ஆண்டு வரை சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக ரூ.2435 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக வெறும் ரூ.167 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. அதாவது ... மேலும் பார்க்க

குப்பையில் கிடைத்த தங்க மோதிரத்தை ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்களுக்கு குவியும் பாராட்டு!

திருப்பரங்குன்றம்: திருமங்கலத்தில் குப்பைகளை தரம் பிரிக்கும் போது கிடைத்த தங்க மோதிரத்தை ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்களை நகராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழமை பாராட்டியது.திருமங்கலம் நகராட்சிப் பகுதிகளில் ச... மேலும் பார்க்க