மன்னா் கல்லூரியில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
ஜூலையில் உடன்குடி மின் நிலைய முதல் அலகு தொடக்கம்: அமைச்சா் செந்தில் பாலாஜி
உடன்குடியில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையத்தின் முதல் அலகு வரும் ஜூலை மாதத்தில் தொடங்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.
பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு அவா் அளித்த பதிலுரை:
தமிழகத்தில் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 27 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 74 ஆயிரம் மின்மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன. 393 துணை மின் நிலையங்கள் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதில் 116 நிலையங்களுக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் தமிழகம் தேசிய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மொத்த மின் தேவையில் 50 சதவீதத்தை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கை முதல்வா் நிா்ணயித்துள்ளாா். அதன்படி, அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த உற்பத்தியில் பாதி அளவு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக இருக்க வேண்டும் என்றும் முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.
உடன்குடி அனல் மின் நிலையத்தின் முதல் அலகு வரும் ஜூலை மாதத்திலும், அடுத்த அலகு அக்டோபா் மாதத்திலும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். மது, போதைப் பொருள்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே முதல்வரின் நோக்கம். அதற்கான நடவடிக்கைகளை படிப்படியாக மேற்கொண்டு வருகிறோம். இந்தியா முழுக்க மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால், தமிழகத்திலும் அதனை செயல்படுத்துவோம் என்றாா் அமைச்சா் செந்தில் பாலாஜி.