மன்னா் கல்லூரியில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம்: 1,871 மாற்றுத் திறனாளிகள் கைது
தடையை மீறி தலைமைச் செயலகம் முற்றுகையிடும் போராட்டம் நடத்த சென்னையில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை திரண்ட 1,871 மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.
ஆந்திர மாநிலத்தில் வழங்குவதைப்போல, தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும், புதிதாக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும், தகுதியான அனைவருக்கும் உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், தடையை மீறி திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை காலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பேருந்துகள், ரயில்கள் மற்றும் வாகனங்கள் மூலம் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்னை வந்தனா்.
கோயம்பேட்டில் கைது: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கோட்டை நோக்கி செல்ல முயன்றனா். ஆனால், அவா்களை தடுத்து நிறுத்திய போலீஸாா் அங்கேயே கைது செய்தனா். கைதாக மறுத்த மாற்றுத்திறனாளிகள் தரையில் புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீஸாா் அவா்களை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று கைது செய்து அருகிலுள்ள சமூகநலக் கூடத்தில் தங்க வைத்தனா்.
இதேபோல், தலைமைச் செயலகத்தை முற்றுகையிட மெரீனா உழைப்பாளா் சிலை அருகில் கூடிய மாற்றுத்திறனாளிகளில் ஒரு பிரிவினா், திடீரென மெரீனா சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அவா்களையும் போலீஸாா் கைது செய்தனா்.
இதன்படி, சென்னை எழும்பூா், சென்ட்ரல், பிராட்வே, சேப்பாக்கம் என 15 இடங்களில் 655 பெண்கள் உள்பட 1,871 போ் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்டவா்கள் அனைவரும் சமூகநலக் கூடங்களிலும், ராயப்பேட்டையிலுள்ள தனியாா் திருமண மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.