பஞ்சாபில் சிவசேனை கட்சித் தலைவர் சுட்டுக்கொலை!
பஞ்சாபில் சிவசேனை கட்சித் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபின் மோகா மாவட்டத்தின் சிவசேனை கட்சித் தலைவர் மங்கத் ராய் என்ற மங்கா மீது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், ஒரு சிறுவன் பலத்த காயமடைந்தான்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “இறந்தவர், மங்கத் ராய் என்ற மங்கா, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையின் மோகா மாவட்டத் தலைவராக இருந்தார். மளிகைப் பொருள்கள் வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே வந்த மங்காவை (52), இரவு 10 மணியளவில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதையும் படிக்க: திமுகவினர் பயனடையும் பட்ஜெட்: அண்ணாமலை விமர்சனம்
துப்பாக்கிச் சூட்டில் முதலில் 12 வயது சிறுவன் காயமடைந்தான். இதைக் கண்டு தப்பித்த மங்காவை அந்த மர்மநபர்கள் விரட்டிச் சென்று சூட்டனர். இதில், பலத்த காயமடைந்த மங்காவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேர் மற்றும் சில அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யக் கோரி, சில அமைப்புகளும், இறந்தவரின் குடும்பத்தினரும் இங்குள்ள பிரதாப் சௌக்கில் போராட்டம் நடத்தினர். பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு நிலைமை முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகக் கூறி, ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்துள்ளன.
இதையும் படிக்க: பட்ஜெட்: அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள்! 40,000 பணியிடங்கள் நிரப்பப்படும்!