மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் பாபா சித்திக்கை கொன்றவர்கள் மொபைல் போனில், அவரது மகன் ஸீஷான் சித்திக்கின் புகைப்படம் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் பாபா சித்திக்கை மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கோ் நகரில் தனது மகனும் எம்எல்ஏவுமான ஸீஷான் சித்திக்கின் அலுவலகத்துக்கு வெளியே அக். 12 ஆம் தேதி, இரவு மூன்று போ் துப்பாக்கியால் சுட்டனா். இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாகத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் இதுவரையில் 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், தாக்குதலில் ஈடுபட்டவர்களும் அவர்களுக்கு ஆணை பிறப்பிப்பவர்களும் ஸ்னாப்சாட் என்ற செயலி மூலமே தகவல்களைப் பரிமாறி வந்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் கைப்பேசியில் பாபா சித்திக்கின் மகன் ஸீஷான் சித்திக் இருப்பதும் தெரிய வந்தது.
இது தொடர்பாக, அவர்களிடம் முழுமையான விசாரணை நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி, மகாராஷ்டிரத்தில் பாபா சித்திக்குக்கு உள்ள அந்தஸ்து பற்றி தெரியாத, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களிடம்தான் இந்த கொலைக்கான ஒப்பந்தம் குறைந்த பணத்தை அளித்து திட்டமிடப்பட்டதாகவும் கூறுகின்றனர்.
இந்த நிலையில், பாபா சித்திக் கொலைக்கு முழு பொறுப்பேற்பதாக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
இந்த தாக்குதலின்போது, பாபா சித்திக்குடன் இருந்த கான்ஸ்டபிளையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. பாபா சித்திக்கின் காருக்கு பின்னால் ஒளிந்திருந்த கும்பல், பாபா சித்திக் காருக்கு அருகில் வந்தவுடன், புகைபொருள்களைக் கொண்டு புகைமூட்டத்தினைக் கிளப்பியுள்ளனர்.
இதையும் படிக்க: ரூ.58,000-ஐ கடந்த தங்கம் விலை: அதிர்ச்சியில் மக்கள்!
மேலும், உடனிருந்த கான்ஸ்டபிளின் கண்களில் மிளகாய்ப்பொடி போன்ற ஒன்றைத் தூவியுமுள்ளனர். இதனைத் தொடர்ந்துதான், பாபா சித்திக் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
பாபா சித்திக்குக்கு பகல்வேளையில் இரு காவலர்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டும்; ஆனால், தாக்குதல் நேரத்தில் ஒரு காவலர் மட்டுமே உடனிருந்ததாகவும் கூறப்படுகிறது.