போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: ஒரே நாளில் 290 பேர் கைது, 232 வழக்குகள் பதிவு!
முதல்முறை வெளிநாடு பயணம் செய்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு!
பாகிஸ்தானில் முதல் முறையாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் அந்நாட்டு மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா, குஜராத், சியால்கோட், மண்டி, பஹாவுத்தீன் மற்றும் ஜேலும் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குறிப்பாக 35 வயது மதிக்கத்தக்க பயணிகள் அந்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஃபெடரல் விசாரணை ஆணையம் விதித்துள்ள இந்த கட்டுப்பாடுகளின் அடிப்படையில், அந்நாட்டிலிருந்து சவுதி அரேபியா, ஈரான், ஈராக், துருக்கி, கத்தார், அஜர்பைஜான், குவைத், கிர்கிஸ்தான், ரஷியா, எகிப்து, லிபியா, எத்தியோபியா, செனீகல், மௌரிடியானா மற்றும் கெனியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் நபர்களின் மீது கடுமையான விபரக் குறிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்னரே அவர்கள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், விமான நிலையங்களில் அதிகாரிகள் பயணிகளின் ஆவணங்களை முழுமையாக சரிபார்த்து, அவர்களின் பயண நோக்கங்கள் மற்றும் நிதி ஏற்பாடுகளை உறுதிப்படுத்த நேர்காணல்களை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: போதைப் பழக்கத்திற்கு அடிமையான பெண்! முகத்தில் உருவான ஓட்டை!
இந்நிலையில், உம்ராவுக்காக (புனித யாத்திரை) சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்ய மறுக்கப்பட்ட ஒரு பக்தரின் மனு தொடர்பாக லாகூர் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, பயணிகள் தெளிவான பயண நோக்கம், உறுதிப்படுத்தப்பட்ட ஹோட்டல் முன்பதிவுகள் மற்றும் போதுமான நிதி ஆதாரங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று அந்த ஆணையம் கூறியுள்ளது. மேலும், உம்ராவுக்காக பயணம் செய்பவர்கள் போதுமான மத புரிதலைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அந்த ஆணையம் குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த சில காலமாக லிபியா, தெற்கு கிரீஸ், மொராக்கோ ஆகிய நாடுகளில் ஏற்பட்ட அகதிகளின் படகு விபத்துகளில், உம்ரா செய்வதாகக் கூறி வெளிநாடுகளுக்கு சென்ற பாகிஸ்தானியர்கள் பயணித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக பாகிஸ்தானிலிருந்து வெளிநாடுகளில் குடியேறுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சட்டவிரோதமாக குடியேறுவதற்கு பாகிஸ்தானிலிருந்து 15 நாடுகளின் வழியாகதான் பெரும்பாலானோர் பயணிப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.