மசூதியில் குண்டு வெடிப்பு: தலைமை இமாமை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்!
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்திலுள்ள மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
கைபர் பக்துன்குவாவின் மொந்ஷேரா மாவட்டத்திலுள்ள மசூதியில் நேற்று (பிப்.28) மதியம் நடைபெற்ற தொழுகையின்போது தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் தலைமை இமாம் உள்பட 8 பேர் தற்போது பலியாகியுள்ளனர். மேலும், படுகாயமடைந்த 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜமாய்த் உலமா இஸ்லாம் பிரிவின் தலைமை இமாம் மற்றும் மதரஸா-இ-ஹக்கானியா மசூதியின் பொறுப்பாளருமான ஹமீதுல் ஹக் ஹக்கானியை படுகொலை செய்யும் நோக்கத்தில் இந்த தாக்குதலானது நடத்தப்பட்டிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று (பிப்.28) ஹமீதுல் ஹக் அவரது கூட்டாளிகளுடன் தனது வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் அவர்களது வழியை மறித்து நடத்திய இந்த தற்கொலை குண்டு வெடிப்பில் அவருடன் சேர்த்து 5 பேர் பலியாகினர். பின்னர், படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி பலியானவர்களுடன் சேர்த்து தற்போது 8 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: டிரம்ப் - ஸெலென்ஸ்கி இடையே காரசார வாக்குவாதம்! நடந்தது என்ன?
இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த தாக்குதலுக்கு எந்தவொரு மதம் சார்ந்த அமைப்புகளுக்கும் தொடர்பில்லை என அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இஸ்லாமிய அறிஞர்கள் சங்கத்தின் மாநாட்டில், பெண் கல்வியைத் தடுப்பது இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரானது என்று ஹமீதுல் ஹக் பேசியிருந்தார். அதன் பின்னர் அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 1968 ஆம் ஆண்டு பிறந்த ஹமிதுல் ஹக் அவரது தந்தையான மௌலானா சமியுல் ஹக்கின் மரணத்திற்கு பின் ஜமாய்த் உலமா இஸ்லாம் பிரிவின் தலைவராக பதவியேற்று கொண்டார். இருப்பினும், இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.