கேப்டனாக ஜோஸ் பட்லருக்கு கடைசி போட்டி; 179 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கராச்சியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இதையும் படிக்க: ரிஷப் பந்த் விளையாடாதது மிகவும் கடினமாக இருக்கிறது: இந்திய அணியின் பயிற்சியாளர்
179 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து
இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். அந்த அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. பில் சால்ட் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின், ஜேமி ஸ்மித் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடியது. இருப்பினும், பென் டக்கெட் 21 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும்.
ஜோ ரூட் 44 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து வியான் முல்டர் பந்துவீச்சில் போல்டானார். அதன் பின் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சீரான இடைவெளிகளில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். ஹாரி ப்ரூக் 19 ரன்கள், கேப்டன் ஜோஸ் பட்லர் 21 ரன்கள், லியம் லிவிங்ஸ்டன் 9 ரன்கள், ஜேமி ஓவர்டான் 11 ரன்கள், ஜோஃப்ரா ஆர்ச்சர் 25 ரன்கள் எடுத்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 38.2 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தென்னாப்பிரிக்கா தரப்பில் மார்கோ ஜேன்சன் மற்றும் வியான் முல்டர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டுகளையும், லுங்கி இங்கிடி மற்றும் ககிசோ ரபாடா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: நியூசி.க்கு எதிரான போட்டியில் முகமது ஷமிக்கு பதில் அர்ஷ்தீப் சிங் விளையாடுகிறாரா?
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி களமிறங்குகிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து இங்கிலாந்து அணி வெளியேறியதையடுத்து, வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான (டி20, ஒருநாள்) இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக ஜோஸ் பட்லர் நேற்று (பிப்ரவரி 28) அறிவித்தது குறிப்பிடத்தக்கது.