அரசு மருத்துவமனையில் உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இன்று நள்ளிரவு கரையை கடக்கும் டானா புயல்: அறிய வேண்டிய 10 முக்கிய தகவல்கள்
வங்கக் கடலில் உருவான டானா புயல் இன்றிரவு ஒடிசா - மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கவிருக்கும் நிலையில், ஒடிசா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.
ஒடிஸாவில் ‘டானா’ புயல் வியாழக்கிழமை நள்ளிரவில் கரையைக் கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 14 மாவட்டங்களில் இருந்து சுமாா் 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
டானா புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒடிசா, மேற்கு வங்கம் என இரு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று புதன்கிழமை காலை புயலாக வலுவடைந்தது.
இதையும் படிக்க.. பிரியங்கா வேட்புமனு தாக்கலின் போது வெளியே அனுப்பப்பட்டாரா கார்கே?
இந்த புயல் சின்னம் பற்றி முக்கியமான பத்து தகவல்கள்..
இந்த புயல் சின்னம் ஒடிசா - மேற்கு வங்கம் கடற்கரை இடையே வியாழக்கிழமை நள்ளிரவில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
ஒடிசாவின் புரி - மேற்கு வங்கத்தின் சாகர் இடையே கரையை கடக்கலாம் என கணிப்பு.
கரையை கடக்கும் நிகழ்வானது அக்.24 நள்ளிரவில் தொடங்கி அக். 25 அதிகாலை வரை நீடிக்கும்.
கரையைக் கடக்கும் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். கடல் அலைகள் 2 மீட்டா் உயரத்துக்கு எழும் என எச்சரிக்கை.
டானா புயல் காரணமாக அங்குல், பூரி, நாயகா், கோா்தா, கட்டாக், ஜகத்சிங்பூா், கேந்திரபாரா, ஜாஜ்பூா், பத்ரக், பாலசோா் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தகவல்.
டானா புயல் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்), ஒடிஸா பேரிடா் அதிவிரைவுப் படை (ஒடிஆா்ஏஎஃப்), தீயணைப்பு சேவைகள் ஆகியவற்றின் 28 மீட்புக் குழுக்கள் களத்தில் உள்ளன.
பாதிக்கப்படும் அபாயம் உள்ள கிராமங்களிலிருந்து ஏற்கனவே 3 முதல் 4 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். இன்று இரவுக்குள் முழுமையாக இப்பணிகள் முடிந்துவிடும் எனத் தகவல்.
வியாழக்கிழமை மாலை முதல், புவனேஸ்வரம் விமான நிலையத்திலிருந்து விமானப் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் சேவை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டது.
மேற்கு வங்கத்தில் இதுவரை 1.4 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் 2.8 லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லும் பணி தீவிரம்.
வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் கொல்கத்தா விமான நிலையத்தில் விமானப் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் இயக்கப்படும் 190 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.