காரை நடுரோட்டில் விட்டுச் சென்ற மக்கள்! ஸ்தம்பித்துப்போன பெங்களூரு நகரம்!!
தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைநகர் பெங்களூரு கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசலுக்கும் தலைநகராக மாறியிருப்பது, அங்கிருக்கும் அனைவருக்குமே துயரமான செய்திதான்.
ஏற்கனவே போக்குவரத்து நெரிசலால் சிக்கித் தவிக்கும் பெங்களூரு, புதன்கிழமை இரவு ஒரு மோசமான நாளாக மாறியது.
கடந்த ஒரு சில நாள்களாக கனமழை பெய்து, தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழை நீர் தேங்கியதால், நேற்று மாலை முதல், சாலைகளில் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. வெறும் 2 கிலோ மீட்டரைக் கடக்க இரண்டரை மணி நேரத்துக்கு மேல் ஆனதாக பல வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சிலர் பொறுமை இழந்து வாகனங்களை சாலைகளிலேயே விட்டுவிட்டு நடந்து சென்றதாகவும் கூறுகிறார்கள். தங்களுக்கு நேர்ந்த துயரம் குறித்து பலரும் இன்று விடியோ பகிர்ந்துள்ளனர். சிலர் புகைப்படங்களையும் பகிர்ந்து, கெட்ட கனவு என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஒரு வேளை, அப்பகுதியில் யாருக்காவது மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால், அவர்கள் பிழைக்கவே வாய்ப்பில்லை என்றும் சிலர் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்கள்.
பெங்களூருவின் மாடிவாலா மேம்பாலம், வாகன நெரிசலால் சிக்குண்டு காணப்படுவதும், பலரும் காரிலிருந்து இறங்கி நடந்து செல்வதும் விடியோக்களாக பரவி வருகிறது.
மாலை 5.30 மணிக்கு வெளியே வந்த பலரும், இரவு 7 மணி வரை சாலையிலேயே காரில் காத்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.