BB Tamil 8: தீபாவளிக்கு வைல்டு கார்டு என்ட்ரி! 'பிக் பாஸ்' செல்கிறாரா `எவிக்ட்’ ஆனவரின் மனைவி?
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8 அக்டோபர் 6-ம் தேதி ஒளிபரப்பாகத் தொடங்கியது. அர்னவ், ரவீந்தர், தர்ஷா குப்தா, பவித்ரா ஜனனி உள்ளிட்ட பதினெட்டு பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்கள்.
அடுத்த 24 மணி நேரத்தில் சாச்சனா வெளியேறினார். மீண்டும் அவர் நிகழ்ச்சிக்குள் வந்து விட்டதால், அந்த அதிரடி எவிக்ஷன் ஏன் நடந்தது என இதுவரை யாருக்கும் தெரியவில்லை.
தொடர்ந்து முதல் வார எவிக்ஷனுக்கான ஷூட்டிங் பிக்பாஸ் செட்டில் நடந்தது. விஜய் சேதுபதி கலந்து கொண்ட ஷூட்டிங்கின் இறுதியில் எவிக்ட் ஆகி, முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் தயாரிப்பாளர் ரவீந்தர். தொடர்ந்து இரண்டாவது வார எவிக்ஷனில் நடிகர் அர்னவ் வெளியேற, தற்போது 7 ஆண்கள் 9 பெண்கள் பேர் என மொத்தம் பதினாறு போட்டியாளர்கள் அந்த வீட்டில் இருக்கிறார்கள்.
முதல் நாள் நிகழ்ச்சிக்கு செல்லும் போட்டியாளர்கள் தவிர்த்து வைல்டு கார்டு என்ட்ரி என சிலரை சில நாட்கள் கழித்து அனுப்புவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கிற வழக்கம்தான். கடந்த சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக சென்ற அர்ச்சனா தான் கடைசியில் டைட்டில் வென்றார் என்பது அனைவரும் அறிந்த தகவல் தான்.
இந்நிலையில் இந்த சீசனின் வைல்டு கார்டு என்ட்ரி எப்போது இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே இருக்கிறது.
நிகழ்ச்சிக்காக ஆரம்பத்தில் தேர்வான சிலரையே அப்போது அனுப்பாமல், 'வைல்டு கார்டு என்ட்ரியாக பிறகு அனுப்பலாம்' என சொன்னதாக பேசப்பட்டது.
அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா, ரோஷன் என சிலரது பெயர்கள் இந்த சீசனுக்கான வைல்டு கார்டு என்ட்ரியில் தற்போது அடிபட்டுக் கொண்டிருக்கிறது.
நம் சோர்ஸ் தரப்பில் பேசிய போது, 'வைல்டு கார்டு என்ட்ரிக்கு சிலர்கிட்ட பேசியிருக்காங்க. இந்த வார இறுதி அல்லது தீபாவளியை ஒட்டி வைல்டு கார்டு என்ட்ரி இருக்கலாம். அது ஒன்றுக்கும் மேல் போகலாம்னு எதிர்பார்க்கப்படுது' என்கிறார்கள்.
மேலும் இன்னொரு ட்விஸ்ட்டாக ஒரு வைல்டு கார்டு போட்டியாளராக நிகழ்ச்சிக்குள் செல்ல நடிகர் அர்னவின் மனைவி திவ்யாவையும் அணுகியதாகவும் சொன்ன இன்னொரு சோர்ஸ், 'டே ஒன்ல இருந்து போறதுக்கே திவ்யாவிடம் பேசியிருக்காங்க. ஆனா அப்ப அர்னவ் போறதாக மட்டுமே திவ்யாவுக்கு சொல்லப்பட்டிருக்கு. அன்ஷிதா போறது பத்திச் சொல்லவே இல்லையாம். ஆனா அந்தச் சமயத்துல என்ன நினைத்தாரோ திவ்யா `நோ’ சொல்லிட்டாங்க. முதல் நாள் டிவியில் நிகழ்ச்சி பார்த்து தான் அன்ஷிதாவும் நிகழ்ச்சிக்குப் போனதே திவ்யாவுக்குத் தெரிஞ்சிருக்கு.
இந்தச் சூழல்ல வைல்டு கார்டு என்ட்ரிக்கு திவ்யா சம்மதிப்பாங்களானு தெரியலை' என்றும் கூறப்படுகிறது.
தற்போதையை நிலவரப்படி பிக்பாஸ் வீட்டுக்குள் ஆண்களின் எண்ணிக்கையே குறைவாக இருப்பதால் வைல்டு கார்டு போட்டியாளர்களில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்றும் தெரிகிறது.
அர்னவ் வெளியேற்றம் குறித்து நாம் திவ்யா தரப்பில் கேட்ட போது, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டவர்கள், வைல்டு கார்டு என்ட்ரி குறித்த கேள்வியக் கேட்டதும் சைலண்ட் மோடுக்குப் போய் விட்டார்கள்.
தற்சமயம் சன் டிவியின் 'செவ்வந்தி' தொடரில் நடித்து வருகிறார் திவ்யா.. அந்தப் பக்கம் நாம் பேச்சுக் கொடுத்த போது, 'இந்த சீரியல் ஒளிபரப்பாகிற ஸ்லாட்டுக்குப் புதுச ஒரு சீரியல் தயாராகி ரெடியா இருக்கு. அதனால எந்த நேரத்திலும் 'செவ்வந்தி' முடிவுக்கு வரலாம்' என்கின்றனர்.
அதனால் திவ்யா பிக்பாஸ் சென்றாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஒருவேளை திவ்யா பிக்பாஸ் சென்றால் அங்கு அன்ஷிதா இருக்கிறாரே என்கிறீர்களா... அது பிக்பாஸின் பிரச்னை! அவர் அதையே எதிர்பார்ப்பவராக இருந்தால்..?
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...