Ajith: `` `GBU'பெரிய அளவில் லாபம் ஈட்டவில்லை என்றாலும்" - `மைத்ரி மூவி மேக்கர்ஸ்...
ஜீரோ டூ சிலிக்கான் பள்ளத்தாக்கு: ``இந்தியாதான் உலக நாகரிகத்தை வடிவமைத்த சக்தி'' - வரலாற்றாசிரியர்
இந்திய வரலாற்றை முன்வைத்து புகழ்பெற்ற கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுதியிருக்கும் பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் வில்லியம் தால்ரிம்பில், இந்தியாதான் உலக நாகரிகங்களின் மையம் எனப் பேசியுள்ளார்.
இதுகுறித்து கடந்த ஆண்டு அவரது The Golden Road: How Ancient India Transformed the World என்ற புத்தகம் வெளியானது. கணிதத்தில் இன்றியமையாத பூஜ்ஜியம் என்ற கருத்து, சதுரங்கம் விளையாட்டு எல்லாம் இந்தியாவில்தான் உருவானது. பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்பது முதன்முதலாக அறியப்பட்டது இந்தியாவில்தான்.
அறிவுத்தளத்தில் மனித குலத்துக்கு இன்றியமையாத புரட்சிகள் நடந்துள்ள இந்தியா உலகில் ஒரு ஓரமாக வாழ்ந்த நாகரிகம் அல்ல, உலக நாகரிக வளர்ச்சியின் இதயமாக வடிவமைக்கும் சக்தியாக இருந்துள்ளது என்கிறார் அவர்.
வர்த்தகம், அறிவுத்திறன், ஆன்மிகம் அனைத்திலும் செழித்தோங்கிய இந்தியா சீனா முதல் ரோம் வரை செல்வாக்கு செலுத்தியதாக அவரது புத்தகங்களில் ஆதாரங்களை முன்வைத்திருக்கிறார் வில்லியம் தால்ரிம்பில்.
அமெரிக்க செய்தி தளமான சி.என்.என்-க்கு அவர் அளித்த பேட்டியில் ஆசியமுழுவதும் இருந்த மகத்துவமான இந்திய செல்வாக்கை மீட்டெடுப்பதே தனது புத்தகத்தின் நோக்கம் எனக் கூறியுள்ளார்.
பௌத்தம், இந்துத்துவம் போன்ற இந்தியாவில் உருவான மதங்கள், ஆன்மிக கூறுகள் மற்றும் தத்துவங்களில்தான் இன்றைய பாதி உலகமே வாழ்ந்துகொண்டிருக்கிறது என்கிறார்.

லவோஸ், தாய்லாந்து, கம்போடியா என தென்கிழக்கு ஆசியாவுடன் சீனாவையும் பௌத்தம் ஆக்கிரமித்துள்ளது. இந்தியாவின் கருத்துக்கள் போர் வழியாகத் திணிக்கப்படாமல் கலாச்சாரம் மற்றும் வர்த்தகத்தின் வழியாக பரவியிருக்கின்றன" எனப் பேசியுள்ளார்.
இந்தியாவில் எழுதப்பட்ட மகாபாரதம், ராமாயணம் போன்ற கதைகள் கண்டங்களைக் கடந்து பரவியிருக்கிறது. சுமத்ராவிலும் தாய்லாந்திலும் இந்தக் கதைகள் சுவர்களில் செதுக்கப்பட்டுள்ளன.
கலாச்சார பரவல் மட்டுமல்லாமல், அவற்றுடன் மேற்குலகில் மறக்கப்பட்ட இந்திய கணிதமும் அறிவியலும் இந்த நாடுகளுக்குப் பரவியிருப்பதாக அவர் கூறுகிறார். "நாம் பயன்படுத்தும் எண்களை அரபு எண்கள் என்கிறோம். ஏனென்றால் அரபிலிருந்துதான் மேற்குலகுக்கு எந்த எண்கள் அறிமுகமாகின. ஆனால் அரேபியர்கள் அந்த எண்கள் இந்தியாவிலிருந்து சென்றன" எனக் கூறியுள்ளார்.
பூஜ்ஜியத்தை உருவாக்கி ஆர்யபட்டாதான் அல்ஜீப்ரா, அல்காரிதம், பைனரி ஆகியவற்றின் முன்னோடி என்றும் மேற்குலகம் இந்தியர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டுமென்றும் அவர் பேசியிருக்கிறார்.
இந்தியர்களின் அறிவுத்திறன் தொடர்ச்சி இன்றும் தொடருவதாகத் தெரிவித்தவர்,
"12ஆம் நூற்றாண்டில் ஸ்பெயினில் இஸ்லாமிய அறிஞர்கள் இந்தியர்களை கணித வல்லுநர்கள் எனத் தெரிவித்தனர். இன்று நீங்கள் சிலிக்கான் பள்ளத்தாக்குக்குச் சென்றால் அதே கதையை உங்களிடம் மீண்டும் கூறுவார்கள்" என்றார்.
மேலும் அவர் இந்திய பொருளாதார வளர்ச்சியைக் குறிப்பிட்டு, "ஜப்பான், ஜெர்மனியை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, இந்த நூற்றாண்டின் இறுதியில் இந்தியா உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக இருக்கும்" எனக் கூறியுள்ளார்.