``தமிழக அரசின் திருத்த மசோதா, உயர்கல்வியை தனியார்மயமாக்கும்'' - கல்வியாளர்கள் க...
``18 வயதில் ரூ.55000 கிடைக்கும்'' - பெண் குழந்தைகள் பிறந்தால் டெபாசிட் செய்யும் தொழிலதிபர்
தீபாவளி என்றால் நாம் ஒரே நாளில் கொண்டாடி முடித்து விடுவோம். ஆனால் வட இந்தியாவில் ஒரு வாரம் தீபாவளியை கொண்டாடுவது வழக்கம்.
அதில் ஒரு நாள் லட்சுமி பூஜை கொண்டாடுகிறார்கள். பெண்களை தெய்வமாக மதிக்கும் மனிதர்கள் பெண் குழந்தைகள் பிறந்தால் மட்டும் ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.
இதனால் வட இந்தியாவில் குறிப்பாக குஜராத் போன்ற மாநிலங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால் ஆண், பெண் விகிதாச்சாரம் சீர்குலைய ஆரம்பித்து இருக்கிறது.
இதையடுத்து பெண் குழந்தைகள் பிறப்பதை ஊக்கப்படுத்தும் நோக்கில் குஜராத் தொழிலதிபர் ஒருவர் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி பெற்றோரிடம் நன்மதிப்பை பெற்று இருக்கிறார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள உள்ள கேடா என்ற மாவட்டத்தில் இருக்கும் உத்தர்சண்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் மோகன் பட்டேல். மும்பையில் தொழில் செய்து வரும் மோகன் எப்போதும் தனது கிராமத்தின் மீது அதிக அக்கறை காட்டுபவர்.
இவர் கடந்த 2008ம் ஆண்டு முதல் முறையாக தனது கிராமத்தில் பெண் குழந்தைகள் பிறந்தால் அதன் பெற்றோருக்கு ரூ.1000 கொடுக்கும் திட்டத்தை தொடங்கினார்.

அன்றிலிருந்து இருந்து அந்த கிராமத்தில் பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ஆயிரம் ரூபாய் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். தனது கிராமம் மட்டுமல்லாது பக்கத்து கிராமத்து குழந்தைகளுக்கும் கூட ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார். மோகன் தனது பிறந்தநாளான ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பிறக்கும் குழந்தைகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார். அதோடு இப்போது தனது கிராமத்தை சேர்ந்த 3 முதல் 6 வயது வரையிலான 400 பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.11 ஆயிரத்தை வங்கியில் டெபாசிட் செய்துள்ளார்.
அந்த பணத்தை அக்குழந்தைகளின் படிப்பு செலவு அல்லது திருமணத்திற்கு மட்டுமே எடுப்போம் என்று பெற்றோரிடம் ஒப்பந்தமும் செய்து கொள்கிறார். அந்த பணம் பெண் குழந்தைகள் 18 வயதாகும் போது ரூ.55 ஆயிரமாக கிடைக்கும்.
இது குறித்து மோகன் கூறுகையில்,''நான் கொடுக்கும் தொகை மிகப்பெரியது கிடையாது. அதேசமயம் மிகவும் சிறியதும் கிடையாது. இது அவர்களுக்கு ஊக்கத்தொகையாக இருக்கும் என்று நம்புகிறேன். பாலின விகிதாச்சாரத்தை சரி செய்யும் நோக்கில் லட்சுமியாக பிறக்கும் பெண் குழந்தைகளுக்காக இதை செய்கிறேன்.
மேலும், ஈஸ்வர்பாய் ஜீவாபாய் படேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கல்வி, சீருடை, பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
பெண் குழந்தைகள் விவகாரத்தில் நமது கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்வது காலத்தின் தேவை. பெண் குழந்தைகளை ஆண் குழந்தைகளுக்கு சமமாகக் கருதும் வரை, நமது முயற்சிகள் தொடரும்", என்றார்.

இவர் சொந்தமாக டிரஸ்ட் மூலம் நடத்தப்படும் மருத்துவமனையில் ஆண்டுக்கு 150 பெண் குழந்தைகள் பிறக்கிறது. அந்த குழந்தைகளும் இந்த பண உதவியை பெறுகின்றன.
இது வரை 11500 குழந்தைகளுக்கு ரூ.2.6 கோடியை வழங்கி இருக்கிறார். மும்பையின் முன்னாள் ஷெரீப்பான மோகனுக்கு இப்போது 90 வயதை கடந்துவிட்டது.
ஆனாலும் தனது பணி தொடர வேண்டும் என்பதற்காக 'சந்தா மோகன் படேல் ஸ்த்ரீப்ருன் ஹத்ய நிவாரண நிதி' என்ற ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.
குஜராத்தில் இப்போது ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 883 பெண் குழந்தைகள்தான் இருக்கிறார்கள். மோகனின் சொந்த மாவட்டமான கேடாவில் இது ஆயிரத்திற்கு 876 ஆக இருக்கிறார்கள். அதுவும் பட்டேல் சமுதாயம் இதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.