Delhi: 'டெல்லியின் வளர்ச்சிகளை பாஜக உறுதி செய்யும்.!' - பிரதமர் மோடி நெகிழ்ச்சி
டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பான்மை தொகுதிகளை வென்று பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சியை அமைக்கும் சூழல் நிலவுகிறது. இதையொட்டி டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பாஜக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் டெல்லி சட்டமன்ற தேர்தல் வெற்றி உறுதியாவதைத் தொடர்ந்து மாலை 7 மணி அளவில் டெல்லி பா.ஜ.க அலுவலகத்திற்கு மோடி செல்ல இருப்பதாகவும், அங்கு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் பாஜகவின் வெற்றி குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில், “ வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை வழங்கிய டெல்லி மக்களுக்கு எனது நன்றிகள். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் டெல்லி முக்கிய பங்கு வகிக்கிறது. டெல்லியின் அனைத்து துறையின் வளர்ச்சிகளையும் பாஜக உறுதி செய்யும்.
மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வோம். இந்த வெற்றிக்காக உழைத்த அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.