தமிழகத்தில் அந்தளவில் கல்வி வளர்ச்சி அதிகரித்ததா? திமுக அரசு மீது இபிஎஸ் விமர்சன...
அதிமுகவுடன் கூட்டு சேருபவர்கள் பலவீனமானவர்கள்: கே. எஸ். அழகிரி
சிதம்பரம்: அதிமுகவுடன் கூட்டு சேருபவர்கள் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளனர். ஆதலால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
சிதம்பரத்தில், வியாழக்கிழமை அன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
இந்தியாவில் ஜிஎஸ்டி வரிகுறைப்பு மாபெரும் புரட்சி என்று மோடியும், நிர்மலா சீதாராமனும் கூறியுள்ளனர். இன்றிலிருந்து வரி விகிதம் 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் கோடி மிச்சமாகும் என பிரதமர் கூறியுள்ளார், ஆனால் இந்த 8 ஆண்டுகளில் 4 விதமாக மிக உயர்ந்த வரிவிகிதத்தை அறிவித்து ரூ.55 லட்சம் கோடியை இந்திய மக்களிடமிருந்து வசூலித்துள்ளனர்.
அவர்களே தாங்கள் குறைத்துவிட்டோம். அதனால் மக்களுக்கு நன்மை என கூறுகிறார்கள். 8 ஆணடுகளாக குறைக்காத வரியை, தற்போது ஏன் குறைத்தார்கள். மக்களை 8 ஆண்டுகளாக ஏமாற்றியுள்ளீர்கள். தேர்தலுக்காக தற்போது குறைந்துள்ளீர்கள்.
2010 முதல் 2013 வரை மன்மோகன்சிங் பிரதமராகவும், ப.சிதம்பரம் நிதியமைச்சராகவும் இருந்தபோது, இதே ஜிஎஸ்டியை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார்கள். இரவு பகலாக விவாதம் நடந்தது. அப்போது ஒரே வரி குறைவாவான வரியாக ஜிஎஸ்டி வரி என கூறினார்.
இதுதான் ஜிஎஸ்டியின் இலக்கணம். அப்போது பாஜக மேல்சபையில் ஜிஎஸ்டி வரி முறையை கொண்டுவர வாக்களிக்க மறுத்தார்கள். அன்று அவர்கள் வாக்களித்து இருந்த ஜிஎஸ்டி ஒரே வரி, சீரான வரி அன்று இந்தியாவில் அமலுக்கு வந்திருக்கும்.
அதன் பிறகு ஆட்சிக்கு வந்த பாஜக இதே ஜிஎஸ்டி வரியை கொண்டு வந்தார்கள். காங்கிரஸ் கட்சி அதை திருத்தங்களுடன் ஏற்றுக்கொண்டது. காங்கிரஸ் கட்சி நாட்டின் மீது பற்றும், பொருளாதார வளர்ச்சியின் மீது நம்பிக்கையும் இருந்த காரணத்தால் காங்கிரஸ் கட்சி அதனை ஏற்றுக்கொண்டது. ஆனால் பாஜக ஜிஎஸ்டியில் மிக அதிகமான வரி விதிப்பை செய்தார்கள். எளிய மக்கள் பாதிக்கப்பட்டர்கள்.
அமெரிக்காவில் இருந்த சட்ட விரோதமாக இருந்தவர்களை கைது செய்து கை மற்றும் கால்களில் விலங்கிட்டு இந்தியாவிற்கு கொண்டுவந்தார்கள். அதற்கு ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். இந்திரா காந்தி பிரதமாக இருந்தபோது, அமெரிக்கா மண்ணிற்கே சென்று, எதிராக பேசினார்.
பாகிஸ்தானை இரண்டாக உடைத்து வங்காள தேசத்தைப் பிரித்தபோது, அமெரிக்காவின் 6-வது கப்பல் படை வந்தது. இந்திரா காந்தி பயப்படாமல் பார்ப்போம் என கூறினார். அதன் பின்னர், ரஷியா கப்பற்படை வந்தவுடன் அமெரிக்க கப்பற்படை தானாக திரும்பிவிட்டது.
கரூரில் காங்கிரஸ் கட்சித் தலைவரை, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, திமுகவில் சேர்த்தது நாகரீகமான செயல் அல்ல. ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். ஆனால் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை மதசார்பின்மை கொண்ட அரசியல் இயக்கமாகும். எங்களது தலைவர் ராகுல், அரசியல் ரீதியாகவும், அரசியலுக்கு அப்பாற்பட்டும் ஸ்டாலினுடைய சிறந்த நண்பர்.
நாங்கள் அதிகமான தொகுதிகள் வேண்டும், அமைச்சரவையில் பங்கு வேண்டும் என கேட்பது எங்களது உரிமை. அதற்காக நாங்கள் கூட்டணி மாறிவிடுவோம். வேறு கூட்டணியில் சேர்ந்து விடுவோம் என்று கூறுவது சமூக ஊடகங்களில் வரும் வதந்தியாகும். எடப்பாடி பழனிசாமி அரசியல் பேச வேண்டுமே தவிர, தனி நபர் விமர்சனம் செய்யக் கூடாது, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையைப் பற்றி தனி நபர் விமர்சனம் செய்கிறார். செல்வபெருந்தகை காங்கிரஸ் கட்சிக்கு வந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. நான் தலைவராக இருக்கும்போது ஶ்ரீபெரும்புதூர் தொகுதியை போட்டியிட கொடுத்தேன். ராஜீவ்காந்தி நினைவகம் உள்ளதால், காங்கிரஸ் கட்சி அந்தத் தொகுதியை சோனியாகாந்தியிடம் ஒப்புதல் பெற்று கேட்டுப் பெற்றோம். திமுகவினர் எங்களது கூட்டணியின் நண்பர்கள். அவர்களிடம் நாங்கள் கேட்பது எங்களது உரிமை. அதனை எடப்பாடி பழனிசாமி, திமுகவின் விசுவாசி என கூறுவது தவறானதாகும். நாங்கள் 110 இடங்களில் போட்டியிட்டவர்கள். தற்போது குறைவான இடங்களில் போட்டியிடுகிறோம். அந்த நிலை மாற வேண்டும் என கருதுகிறோம்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
இதையும் படிக்க: அடுத்தடுத்த திருப்பங்களுடன் அதிமுக..! செங்கோட்டையன் - ஓ. பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனை!