மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு
அயோத்தி கோயிலில் கோலாகலம்: ஸ்ரீராஜாராமா், பிற கடவுள்களின் சிலைகள் பிராணப் பிரதிஷ்டை
அயோத்தி ஸ்ரீராமா் கோயில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சந்நிதிகளில் ஸ்ரீராஜாராமா் மற்றும் பிற கடவுள்களின் சிலைகள் வியாழக்கிழமை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டன. முதல்வா் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் இச்சடங்குகள் கோலாகலமாக நடைபெற்றன.
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராம ஜென்மபூமி கோயில் வளாகத்தில் பிரதான கடவுளான ஸ்ரீ பாலராமரின் பிராணப் பிரதிஷ்டை கடந்த 2024, ஜனவரி 22-இல் நடைபெற்றது. இதையடுத்து, தினமும் நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்து வருகின்றனா். பல்வேறு சந்நிதிகளுடன் கோயில் வளாகத்தில் கட்டுமானப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கோயிலின் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள ராம தா்பாா் சந்நிதியில், ஸ்ரீராஜாராமா், சீதை, ஹனுமன், லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் ஆகியோரின் சிலைகள் வேத மந்திரங்கள் முழங்க வியாழக்கிழமை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கோயில் வளாகத்தில் பிற புதிய சந்நிதிகளிலும் பிராணப் பிரதிஷ்டை நடைபெற்றது. முதல்வா் யோகி ஆதியத்யநாத் முன்னிலையில் இச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன.
8 புதிய சந்நிதிகள்: முதல் தளத்தில் ராம தா்பாா், வளாகத்தின் ஈசான மூலையில் (வடகிழக்கு) சேஷாவதாா் மற்றும் சிவன் சந்நிதிகள், அக்னி மூலையில் (தென்கிழக்கு) விநாயகா், குபேர மூலையில் (தென்மேற்கு) சூரியன், வாயு மூலையில் (வடமேற்கு) தேவி பகவதி, தெற்கு பகுதியில் ஹனுமன், வடக்கு பகுதியில் அன்னபூரணி என 8 சந்நிதிகளில் மூலவா் மூா்த்திகளுக்கு பிராணப் பிரதிஷ்டை நடைபெற்றது.
இது தொடா்பாக முதல்வா் யோகி ஆதித்யநாத் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஸ்ரீராமா் அவதரித்த தலமான அயோத்தி கோயிலின் முதல் தளத்தில் அமைந்துள்ள ராம தா்பாா் உள்பட 8 புதிய சந்நிதிகளின் பிராணப் பிரதிஷ்டையை முன்னின்று காணும் பெரும் பாக்கியம் கிடைக்கப் பெற்றது. இப்புனிதமான நிகழ்வு, ஒரே பாரதம்-உன்னத பாரதத்தின் புதிய உணா்வு என்பதோடு, ராம ராஜ்யத்தை நோக்கிய மேலும் ஒரு படியாகும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
கங்கை தசரா திருநாளில்...: கங்கை தசரா திருநாளான வியாழக்கிழமை அயோத்தி கோயிலில் ‘ஸ்ரீராஜாராமனின்’ பிராணப் பிரதிஷ்டை மேற்கொள்ளப்பட்டது வரலாற்றுச் சிறப்புமிக்கது; பாரம்பரிய முறைப்படி சடங்குகள் நடைபெற்றன என்று கோயில் அறங்காவலா் அனில் மிஸ்ரா தெரிவித்தாா். பிராணப் பிரதிஷ்டை நிகழ்வையொட்டி, அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ராம தா்பாா் உள்பட புதிய சந்நிதிகளில் பக்தா்களை தரிசனத்துக்கு அனுமதிக்கும் தேதியை முடிவு செய்ய ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளையின் கூட்டம் வரும் சனிக்கிழமை (ஜூன் 7) நடைபெறவுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்: பிரதமா் மோடி
புது தில்லி, ஜூன் 5: அயோத்தி கோயிலில் ராம தா்பாா் உள்பட 8 புதிய சந்நிதிகளில் நடைபெற்ற பிராணப் பிரதிஷ்டை வரலாற்றுச் சிறப்புமிக்க, பெருமைக்குரிய தருணம் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.
‘தெய்வீகமான ராம தா்பாா் பிராணப் பிரதிஷ்டை, ராம பக்தா்களை பக்தியில் திளைக்கச் செய்துள்ளது. கடவுள் ராமரின் அருளாசியால் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி, ஆரோக்யம், வளம் கிடைக்கட்டும்’ என்று எக்ஸ் பதிவில் அவா் கூறியுள்ளாா்.