`தேமுதிக-வுக்கு சீட் கொடுக்க வேண்டியது அதிமுக-வின் கடமை!' - சொல்கிறார் பிரேமலதா
`ஆராய்ச்சி, தங்குமிடம், உணவு, சுற்றுலா..' தமிழக மாணவர்களின் பயிற்சிக்கு `கொரியா தமிழ்ச் சங்கம்' உதவி
`நான் முதல்வன்' திட்டத்தில் பயணம்
அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த தமிழக அரசு 'நான் முதல்வன்' என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
இத் திட்டத்தில், பல்வேறு துறைகளில் பயிலும் மாணவர்களைத் தேர்வுசெய்து, உலகளாவிய செயல்முறை ஆராய்ச்சிப் பயிற்சி மேற்கொள்ள 2 வாரங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கிறது.
'நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் ஆறு அரசுக் கல்லூரி மாணவர்களை பயிற்சிக்காக தென் கொரியாவுக்கு முதன்முறையாக தமிழக அரசு அனுப்பியது.
தென் கொரியாவில் செயல்பட்டுவரும் கொரிய தமிழ்ச் சங்கம் இரண்டு மாணவர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றது.
கொரியாவில் சியோல் மற்றும் புசான் விமான நிலையங்களில் வந்திறங்கிய மாணவர்களைக் கொரிய தமிழ்ச் சங்க நிர்வாகிகள் அரவிந்த ராஜா, பத்மநாபன், செலஸ்டின் ராஜா, முத்துச்சாமி, விபின் ஆகியோர் வரவேற்றனர்.
கள்ளக்குறிச்சி அரசுக் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர் சந்துரு குமார் மற்றும் சரபோஜி கல்லூரியில் இளங்கலை இயற்பியல் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் பால்வண்ணன் ஆகிய இரண்டு மாணவர்களுக்கும், மே 12 முதல் மே 23 வரை உள்ள பயிற்சி காலத்தில் தேவையான அனைத்து உதவிகளையும் கொரிய தமிழ்ச் சங்கம் செய்தது.
கொரிய தமிழ்ச் சங்கம்
மாணவர்களின் ஆராய்ச்சிப் பயிற்சி, தங்குமிடம், உணவு, இன்பச் சுற்றுலா, உள்ளூர்ப் போக்குவரத்து என அனைத்தையும் கொரிய தமிழ்ச் சங்கம் பொறுப்புடன் கவனித்துக் கொண்டது.
மாணவர்கள் இருவரும் புசான் பல்கலைக் கழகம், மேம்பட்ட நீடித்த ஆற்றல் ஆய்வகக்கூடத்தில் (Advanced Sustainable Energy Laboratory) பேராசிரியர் முனைவர் கந்தசாமி பிரபாகர் மேற்பார்வையில் பயிற்சி மேற்கொண்டார்கள்.
கொரிய தமிழ்ச் சங்கத்தின் ராமலிங்கம் மணிகண்டன், தீபன், செலஸ்டின் ராஜா, முத்துச்சாமி ஆகியோர் தாங்கள் பணிபுரியும் ஆய்வகங்களிலும் மாணவர்களை அழைத்துச் சென்று மேம்பட்ட சில தொழில்நுட்பங்களை கற்றுக்கொடுத்தனர்.
முனைவர் பழனியாண்டி, அதிஷ், உஸ்மான், லூதா, ராஜஸ்ரீ ஆகியோர் கொரிய தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கு உறுதுணையாகச் செயற்பட்டார்கள்.
அர்ச்சனா மணிகண்டன், பிரேமினி தீபன், முகுந்தன் ஆகியோர் இருப்பிட வசதியுடன், தமிழ்நாட்டு சமையல் முறைப்படி மாணவர்களுக்கு அறுசுவை உணவுகளை தயார் செய்து கொடுத்தனர்.
கொரியாவில் சுற்றுலா
விடுமுறை நாள்களில், கொரிய தமிழ்ச் சங்க உறவுகளின் வழிகாட்டுதலுடன் மாணவர்கள் பல்வேறு சுற்றுலாத் தளங்களைக் கண்டு மகிழ்ந்தனர். அதில் முக்கியமாக,
பண்டைய தமிழகத்திலிருந்து கொரியா வந்தடைந்து காயா மன்னர் கிம் சுரோவை மணந்த ஆய் நாட்டைச் சார்ந்த தமிழரசி செம்பவளம் அவர்களின் நினைவிடம்,
காயா தேசிய அருங்காட்சியகம்,
பொமாசா புத்த ஆலயம்,
குவாங்கலி கடற்கரையில் வலவனிலா வானூர்தி நிகழ்ச்சி (Drone show),
சொங்தோ கடற்கரையில் தொங்கூர்திப் பயணம் (Rope car travel),
ஒரிக்தோ கடற்கரையில் கண்ணாடிப் பாலம்
ஆகியவற்றை மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
ஆராய்ச்சிப் பயிற்சியை சிறப்பாக நிறைவுசெய்த மாணவர்களுக்கு பேராசிரியர் முனைவர் கந்தசாமி பிரபாகர் பாராட்டுச் சான்றிதழை வழங்கி, அவர்களின் கல்விசார்ந்த எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்தினார்.
"பயிற்சி காலத்தில் வெளிநாடு போல நாங்கள் உணரவில்லை, தாயகம் தமிழகத்தில் இருந்தது போலவே உணர முடிந்தது. இக்காலக்கட்டத்தில், புசான்வாழ் தமிழ் உறவுகள் எங்களுக்குஅனைத்து நிலைகளிலும் உறுதுணையாக இருந்தனர்." என்று மாணவர்கள் மகிழ்ச்சியோடு கூறினர்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கொரியாவிற்கு பயில வந்த தமிழக மாணவர்களுக்கு, கொரிய தமிழ்ச் சங்கம் செய்த சீரிய பணியை மாணவர்களும், கொரியாவாழ் தமிழ் உறவுகளும் பாராட்டினர்.
“இனிவரும் காலங்களில், தமிழ்நாட்டிலிருந்து அரசுக் கல்லூரி, முதல் பட்டதாரி, எளிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்களை அதிக எண்ணிக்கையில் வரவழைத்து ஆய்வகப் பயிற்சி வழங்கிட கொரிய தமிழ்ச் சங்கம் ஆயத்தமாக உள்ளது” என சங்கத்தின் தலைவர் அரவிந்த ராஜா உற்சாகமாக கூறுகிறார்.

மேலும், “இத்திட்டத்தின் மூலம் தமிழக அரசுக் கல்லூரி மாணவர்களை ஊக்குவித்துவரும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தென்கொரியாவில் செயல்படுத்தும் வாய்ப்பினை நல்கிய 'நான் முதல்வன்' அமைப்பிற்கும், முல்லைக் கல்விக்கூடத்தின் நிர்வாகி பிரசன்னா, பேராசிரியர் கந்தசாமி பிரபாகர், கொரியாவாழ் தமிழ் உறவுகள் என அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கூறினார் அரவிந்த ராஜா.