Vikatan Tele Awards 2024: "விஜய் சார்ட்ட இந்தக் கேள்விதான் கேட்பேன்" - திவ்யதர்ஷ...
``ஏக்நாத் ஷிண்டே துரோகம் செய்வார் என்று எச்சரித்தார்கள், ஆனால்'' - உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
மகாராஷ்டிராவில் மறைந்த பால்தாக்கரே தொடங்கிய சிவசேனா கடந்த 2023ஆம் ஆண்டு இரண்டாக உடைந்தது. அக்கட்சியில் இருந்த ஏக்நாத் ஷிண்டே கட்சியை இரண்டாக உடைத்ததோடு ஒட்டுமொத்த கட்சியையும் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டார்.
கொரோனா காலத்தில் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல்வராக இருந்தார். அந்நேரம் கட்சி நிர்வாகிகளை சரியாக சந்திக்காமலும், முதுகு ஆபரேஷன் செய்து கொண்டதாலும் அதிகமான நேரத்தை தனது வீட்டில் கழித்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஏக்நாத் ஷிண்டே கட்சி நிர்வாகிகளிடம் பேசி அனைவரையும் தனது பக்கம் இழுத்துவிட்டார். ஏக்நாத் ஷிண்டேயின் துரோகம் குறித்து உத்தவ் தாக்கரே முதல் முறையாக பேசியுள்ளார்.

ஏக்நாத் ஷிண்டேயின் கோட்டையான தானேயில் நடந்த பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கலந்துகொண்டு பேசுகையில் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.
அதில் உத்தவ் தாக்கரே, 2014ஆம் ஆண்டே ஏக்நாத் ஷிண்டே துரோகம் செய்யக்கூடும் என்று சிவசேனா தலைவர்களில் ஒருவரான ஆனந்த் தாரே என்னிடம் எச்சரித்தார்.
ஆனந்த் தாரே போன்ற விசுவாசமாக இருந்த சிலர் எங்களிடம், விசுவாசத்தின் போர்வையில் இருப்பவர்களிடமிருந்து வரவிருக்கும் ஆபத்துகள் குறித்து எச்சரித்தார்கள்.
நாம் பெரும்பாலும் அந்த எச்சரிக்கைகளைப் புறக்கணிக்கிறோம், அப்போது தாரேவின் எச்சரிக்கைகளை நான் கவனிக்கவில்லை. இப்போது வருந்துகிறேன்.
இந்த அளவுக்கு பெரிய விஷயம் நடக்காது என்று நினைத்தேன், குறிப்பாக நீங்கள் அனைவரும் (சேனா ஆதரவாளர்கள்) சுற்றி இருக்கும்போது இந்த அளவுக்கு பெரிதாக எதுவும் நடக்காது என்று நினைத்தேன். ஆனால் அது நடந்துவிட்டது'' என்று தெரிவித்தார்.
`சிவசேனாவை அழிக்க பாஜக முயற்சி'
சாம்பாஜி நகரில் விவசாயிகளுக்காக உத்தவ் தாக்கரே நடத்திய போராட்டம் குறித்து ஏக்நாத் ஷிண்டே விமர்சனம் செய்திருந்தார். அது குறித்து கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரே,
''அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை போன்ற நிறுவனங்களின் விசாரணையிலிருந்து ஒருவரின் சொந்தக் கழுத்தைக் காப்பாற்றிக் கொள்ள அமித் ஷாவின் காலில் விழுவதை விட விவசாயிகளுக்காக போராட்டம் நடத்துவது சிறந்தது'' என்று தெரிவித்தார்.

சிவசேனாவை அழிக்க பா.ஜ.க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டிய உத்தவ் தாக்கரே, ''பா.ஜ.க.வை நம்புவது அவரது சொந்த வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். அதை அவர்கள் இன்னும் உணராமல் இருக்கலாம். ஆனால் பாஜக விரைவில் அவரைப்(ஷிண்டே) பயன்படுத்திக் கொண்டு தூக்கி எறியும். தனது சொந்த மக்களுக்கு துரோகம் இழைத்த ஒருவரை எப் படி நம்ப முடியும்?'' என்று அவர் கூறினார்.
தேவேந்திர பட்னாவிஸ் அரசு
முன்னதாக சாம்பாஜி நகரில் நடந்த விவசாயிகளுக்கான போராட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே,
''தேவேந்திர பட்னாவிஸ் அரசு விவசாயிகளை ஏமாற்றுகிறது. அரசு விவசாயிகளின் ஒட்டுமொத்த கடனையும் தள்ளுபடி செய்யவேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு அறிவித்திருக்கும் நிவாரண உதவி என்பது கண்துடைப்பானது. அது உண்மையில் நிவாரண உதவி கிடையாது.

இது வரலாற்றில் மிகப்பெரிய மோசடி. எந்தவொரு அரசாங்கமும் விவசாயிகளை இவ்வளவு பெரிய அளவில் ஏமாற்றியதில்லை.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் மும்பைக்கு விஜயம் செய்தார். அவர் தனது நிகழ்ச்சியில் எங்காவது விவசாயிகள் படும் துயரத்தைப் பற்றி குறிப்பிட்டாரா?
பிரதமருக்கு தான் ஆளும் நாட்டு மக்களின் நிலை தெரியவில்லை என்றால், நாம் அவரிடமிருந்து என்ன நீதியைப் பெற வேண்டும்?'' என்று அவர் கேட்டார்.
மாநிலம் முழுவதும் அடுத்த சில மாதங்களில் நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன.