ஔவையார்... ஔவை யார்?! - தமிழக சட்டப்பேரவையில் நடந்த சுவாரஸ்ய விவாதம்!
இன்று நடந்து வரும் தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஔவையார் குறித்த சுவாராஸ்ய உரையாடல் சட்டமன்ற உறுப்பினர் ஒ.எஸ் மணியன், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, சுவாமிநாதன், சபாநாயகர் அப்பாவுக்கு இடையில் நடந்தது. அந்த உரையாடல்...
அமைச்சர் சுவாமிநாதன்: வேதாரண்யம் தொகுதியில் துளசியாபட்டிணத்தில் இப்போதைக்கு ஔவையார் அறிவு களஞ்சியம் தொடங்கும் கருத்து எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை.
சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ் மணியன்: ஔவையின் வாக்கு அமிர்தமாகும். அரிய நீதிகள் நிரம்பி உள்ளன. சிக்கன சொற்கள் சமூக அக்கறை கொண்டவை. சிரஞ்சீவியாக வாழ்ந்தவர். கவி பாடியவர். உள்ளம், உண்மை, மொழி ஆகியவற்றில் உயர்ந்தவர். அறம், பொருள், இன்பம், வீடு என நான்கும் புரிந்தவர்...வேதாரண்யம் தொகுதியில் துளசியாபட்டிணம் கிராமத்தில் ஔவைக்கு கோயில் உள்ளது... மணிமண்டபமும் கட்டப்படுகிறது. அங்கே ஔவைக்கு அறிவு களஞ்சியம் கட்டுவது குறித்து அமைச்சர் மறுபரிசீலனை செய்வாரா?

அமைச்சர் சுவாமிநாதன்: எதிர்காலத்தில் அரசின் நிதி நிலைமைக்கு ஏற்ப அரசு இதை பரிசீலிக்கும்.
சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ் மணியன்: இதில் நிதி இழப்போ, நிதி தேவையோ ஒன்றும் இல்லை. அங்கே 13 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் ஔவையார் மணி மண்டபத்தில் புத்தகங்கள் வைத்தால் போதும். அவ்வளவு தான்.
அமைச்சர் துரைமுருகன்: ஔவையார் ஒருவர் அல்ல. ஐந்து பேர் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அறம் செய்ய விரும்பு என்று பாடிய ஔவையார் ஒருவர். புறநானுற்றில் பாடிய ஔவையார் வேறு. நடை வேறு, பாட்டு வேறு. அதனால், ஆராய்ச்சியாளர்கள் ஐந்து ஔவையார்களை கூறுகிறார்கள். இதில் எந்த ஔவையாரை தாங்கள் குறிப்பிடுகிறீர்கள்?
சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ் மணியன்: எந்த ஔவையாருக்கு எனது தொகுதியில் மணி மண்டபம் கட்டுகிறீர்களோ, அந்த ஔவையாருக்கு தான் அறிவு களஞ்சியம் கேட்கிறேன்.
சபாநாயகர் அப்பாவு: இருக்கும் ஐந்து ஔவையாரில் உங்கள் ஊரில் இருக்கும் ஔவையார் எந்த ஔவையார்?

சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ் மணியன்: அந்தக் காலத்தில் பெண்பாற் புலவர்கள், மதிப்புமிக்கவர்கள்... அனைவரையும் ஔவையார் என்று தான் அழைத்ததாக தகவல்கள் கூறுகின்றது.
அமைச்சர் துரைமுருகன்: நம் வீட்டில் இருக்கும் பெரியவர்களை ஆயா என்று கூப்பிடுவது மாதிரி.
அமைச்சர் தங்கம் தென்னரசு: இதுவரை ஔவையார் என்று தான் நினைத்துகொண்டிருந்தோம். இப்போது தான் 'ஔவை யார்?' என்றே கேள்வி எழுந்திருக்கிறது. ஔவையாரை ஒரு குறியீடாக எடுத்துக்கொள்ளலாம். அது ஒரு மதிப்பிற்குரிய சொல்லாக எடுக்கப்பட்டு, இந்தக் கோரிக்கையை அமைச்சர் பரிசீலிக்கலாம். முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.
அமைச்சர் சுவாமிநாதன்: கோரிக்கை நிறைவேற பரிசீலிக்கப்படும்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks